crude oil prices falling, expectations arisen that prices of petrol, diesel, cooking gas in India might decrease google
வணிகம்

IRAN போர் நிறுத்தம் : கச்சா எண்ணெய் விலை சரிவு : ”பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைப்பா!” : நிபுணர்கள் சொல்வது என்ன...?

போர் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட நிலையில், கச்சா எண்ணெய் விலை சரிவால், இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை குறையுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Kannan

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போர்

ஈரானின் அணு ஆயுத திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. பதில் தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்த ஈரான், உலகின் 20 சதவீத எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹோர்மூஸ் நீரிணையை மூடியது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு

இதனால் சர்வதேச அளவில் உருவான கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக விலை கடுமையாக அதிகரித்தது. கச்சா எண்ணெய் பேரல் போருக்கு முன் 72 அமெரிக்க டாலருக்கு வாங்கப்பட்ட நிலையில் போரின் இடையே 115 டாலர் வரை உயர்ந்து உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்தியாவிலும் தட்டுப்பாடு

இந்தியாவிலும் தட்டுப்பாடு ஏற்பட மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஒருவாறு சமாளித்த எண்ணெய் நிறுவனங்கள், வேறு வழியின்றி மே மாதம் விலையை உயர்த்தின.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

மே 15ம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா 3 ரூபாய் உயர்த்தப்பட்டது. 4 நாட்கள் இடைவெளியில் மே 19ஆம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு 82 காசுகளும், டீசல் 86 காசுகளும், மே 23ஆம் தேதி பெட்ரோல் 82 காசுகளும், டீசல் 87 காசுகளும் உயர்த்தப்பட்டன.

மே 25ம் தேதி திடீரென பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் 46 காசுகள் உயர்ந்து 107 ரூபாய் 77 காசுகளும், டீசல் 2 ரூபாய் 57 காசுகள் அதிகரித்து 99 ரூபாய் 55 காசுகளும் விலை உயர்ந்தன.

எரிவாயு விலையும் அதிகரிப்பு

ஈரான் - அமெரிக்கா மோதலுக்கு முன்பாக 868 ரூபாய்க்கு விற்ற சமையல் எரிவாயு 957 ரூபாய்க்கு விலையேறியது.

வணிக சிலிண்டர் போருக்கு முன் ஆயிரத்து 899 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் தற்போது 3 ஆயிரத்து 283 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

பேரல் 115 டாலருக்கு விற்கப்பட்ட கச்சா எண்ணெய், போர்நிறுத்த ஒப்பந்தம், ஹோர்முஸ் நீரிணை திறப்பாக, 82 டாலராக விலை குறைந்துள்ளது.

விலை குறைய வாய்ப்பு

போர் முடிவுக்கு வந்து விட்டதால், இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை குறையலாம் என்று நிதி ஆலோசகர் விவேக் கர்வா தெரிவித்துள்ளார். அதேசமயம் தங்கம் விலை அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

வரும் 19ம் தேதி போர்நிறுத்த ஒப்பந்தம், கையெழுத்தான பிறகு நிலைமை மேம்படும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.

================