தமிழ் திரையுலகின் இமயங்களான மூத்த இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கே. பாக்கியராஜ் ஆகியோரின் சாதனைகளைப் போற்றும் வகையில், வரும் 16-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் ‘ராஜகோபுரங்கள் நினைவு உற்சவம்’ என்ற பிரம்மாண்ட விழா நடத்தப்படவுள்ளது.
திரையுலகினரின் பிரம்மாண்ட விழா
அன்று காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறவுள்ள இந்நிகழ்வை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், பெஃப்சி அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் ஆகிய தமிழ்த் திரையுலக அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன.
சொந்த ஊரில் மணிமண்டபம் மற்றும் வெண்கல சிலை
செய்தியாளர்கள் சந்திப்பில் பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி பேசும்போது, "தமிழ் திரையுலகிற்கு அளப்பரிய பங்காற்றிய பாரதிராஜா மற்றும் கே. பாக்கியராஜ் ஆகிய இருவருக்கும், அவரவர் சொந்த ஊரில் மணிமண்டபம் கட்டப்பட்டு, மார்பளவு வெண்கலச் சிலை நிறுவப்படவுள்ளது” என்றார்.
தமிழக முதல்வர் விஜய்க்கு அழைப்பு
தொடர்ந்து பேசிய அவர் இந்நிகழ்வில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்பு
இவ்விழாவில் இந்திய அளவில் புகழ்பெற்ற பல்வேறு திரைப் பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், சிவராஜ்குமார், ரிஷப் ஷெட்டி, வி. ரவிச்சந்திரன், மம்மூட்டி, மோகன்லால், ஜாக்கி ஷெராஃப் மற்றும் போனி கபூர். மத்திய அமைச்சர்கள் எல். முருகன் மற்றும் சுரேஷ் கோபி.
புகைப்படக் கண்காட்சி மற்றும் நடனம்
இரு இயக்குநர்களின் புகழ்பெற்ற படங்கள் பற்றிய புகைப்படக் கண்காட்சியும், அவர்களின் படங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 20 பாடல்களுக்கு மேடை நடன நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
பாரதிராஜா மற்றும் பாக்கியராஜின் வாழ்க்கைப் பயணத்தை 10 நிமிட குறும்படமாக இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கி வருகிறார்.
பொதுமக்களுக்கு அனுமதி
இந்த விழாவிற்குப் பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரியேட்டிவ் ஹெட்
இந்நிகழ்ச்சியின் கிரியேட்டிவ் ஹெட் (Creative Head) பொறுப்பைப் பிரபல இயக்குநர்-நடிகர் பார்த்திபன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜி.கே.எம். தமிழ்குமரன், நாசர், ஆர்.கே. செல்வமணி, டி. சிவா, கே.எஸ். ரவிகுமார், லிங்குசாமி உட்படப் பல திரையுலகப் பிரபலங்கள் உடனிருந்தனர்.
======