Vairamuthu Fulfilled K Bhagyaraj Last Wish Before Death Autobiography Preface x.com,ai
சினிமா

பாக்யராஜின் கடைசி ஆசையை நிறைவேற்றிய கவிஞர் வைரமுத்து : பூர்ணிமாவிடம் ஒப்படைக்கப்பட்ட 'உயிர்த்துடிப்புள்ள' முன்னுரை!

மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜின் 'படிச்சாப் புடிச்சிர்லாம்' சுயசரிதை நூலுக்கு எழுதிய உணர்ச்சிகரமான முன்னுரையை, அவரது இல்லத்திற்கே நேரில் சென்று பூர்ணிமாவிடம் ஒப்படைத்தார் கவிஞர் வைரமுத்து.

Kavitha prasanna

Vairamuthu Fulfilled K Bhagyaraj Last Wish Before Death Autobiography Preface

திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் மறைவு

தமிழ் திரையுலகின் 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் திடீர் மறைவு ஏற்படுத்திய சோகத்தில் இருந்து தமிழ்த் திரையுலகமும் ரசிகர்களும் இன்னும் மீளவில்லை.

கவிஞர் வைரமுத்துவின் நெகிழ்ச்சியான செயல்

அவரைப் பற்றிய நினைவுகளைப் பிரபலங்கள் பலரும் பகிர்ந்து வரும் நிலையில், கவிஞர் வைரமுத்து தற்போது வெளியிட்டுள்ள ஒரு பதிவு பாக்யராஜின் குடும்பத்தாரையும் ரசிகர்களையும் நெகிழ வைத்துள்ளது.

மறைவிற்கு முன் பாக்யராஜ் விடுத்த பாசமான வேண்டுகோள்

கடந்த ஜூன் 17, 2026 அன்று இயக்குநர் பாக்யராஜ், தான் எழுதிய "படிச்சாப் புடிச்சிர்லாம்" என்ற தனது சுயசரிதை நூலின் பிரதியை கவிஞர் வைரமுத்துவிடம் தந்தனுப்பியுள்ளார்.

அத்துடன், "இதற்கு நீங்கள் ஒரு முன்னுரை எழுதிக் கொடுக்க வேண்டும்" என்று பாசத்தோடு கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு வைரமுத்து, "கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்" எனக் கேட்க, பாக்யராஜும் அதற்கு "சரி" என்று சம்மதித்துள்ளார்.

வைரமுத்துவை உலுக்கிய பாக்யராஜின் சுயசரிதை

ஆனால், அந்த உரையாடலே இருவருக்கும் இடையேயான கடைசி உரையாடலாக மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதற்கு அடுத்த சில நாட்களிலேயே, அதாவது ஜூன் 27, 2026 அன்று பாக்யராஜ் திடீரென மாரடைப்பால் காலமானார். இச்செய்தி வைரமுத்துவை நிலைகுலைய வைத்துள்ளது.

வைரமுத்துவை உலுக்கிய பாக்யராஜின் சுயசரிதை

அதன்பின்னர், பாக்யராஜ் எழுதிய சுயசரிதை நூலை வைரமுத்து படிக்கத் தொடங்கியுள்ளார். அந்த நூலைப் படிக்கப் படிக்க, பாக்யராஜ் தனது வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்த துயரங்கள், ரணங்கள், அவமானங்கள் மற்றும் வறுமை ஆகியவை தன்னை வாட்டி எடுத்ததாக வைரமுத்து உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, மறைந்த தன் நண்பனுக்காக மிகவும் உணர்ச்சிகரமான முன்னுரை ஒன்றை அவர் எழுதி முடித்தார்.

இல்லம் தேடிச் சென்று பூர்ணிமாவிடம் ஒப்படைப்பு

சாதாரண சூழ்நிலையாக இருந்திருந்தால் இந்த முன்னுரையை மின்னஞ்சல் மூலமாகவே அனுப்பி வைத்திருப்பேன் என்று குறிப்பிட்டுள்ள வைரமுத்து, இந்த இக்கட்டான சூழலில் பாக்யராஜின் இல்லத்திற்கு நேரில் சென்று வழங்குவதே அவருக்கு செய்யும் முறையான மரியாதை எனக் கருதியுள்ளார்.

இது ஒரு உயிர்த்துடிப்புள்ள புத்தகம்

அதன்படியே, பாக்யராஜின் இல்லத்திற்கு சென்ற கவிஞர் வைரமுத்து, தான் எழுதிய முன்னுரையை அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜிடம் நேரில் ஒப்படைத்தார். அப்போது பாக்யராஜின் மகன் சாந்தனுவும் உடனிருந்தார்.

"இந்த நூலை எவர் வெளியிட்டாலும் உடனே வெளியிடுங்கள்; இது ஒரு உயிர்த்துடிப்புள்ள புத்தகம்" என்றும் வைரமுத்து பாக்யராஜின் குடும்பத்தாரிடம் அன்போடு கேட்டுக்கொண்டுள்ளார்.

======