உலகக் கோப்பை கால்பந்து தொடர்
உலகிலேயே அதிகம் பேரால், கோடிக்கணக்கான ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் மிகப்பெரும் விளையாட்டுத் தொடரான FIFA கால்பந்து உலகக்கோப்பை இன்று தொடங்குகிறது.
இந்த ஆண்டு உலககோப்பையை முதல்முறையாக கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
48 அணிகள் மோதல்
48 அணிகள் களத்தில் மோதுகின்றன. இத்தாலி தகுதி இழந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் இன்று வரை மீளவே இல்லை. அதேசமயம், உஸ்பெகிஸ்தான், ஜோர்டான், கேப் வெர்டே, குராசோ போன்ற அணிகள் முதல்முறையாக தகுதிபெற்று வரலாறு படைத்துள்ளன.
களத்தில் 1,248 வீரர்கள்
39 நாட்கள் நடக்கும் போட்டிகளில் 1248 வீரர்கள் பங்கேற்க, சாம்பியன் அணிக்கு ரூ.476 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உலகக் கோப்பையில் 32 அணிகள் மட்டுமே பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு முதன்முறையாக 48 அணிகள் கலந்து கொள்கின்றன.
”மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர்”
கால்பந்து உலகையே கட்டியாண்ட 3 ஜாம்பவான் வீரர்களுக்கு இறுதி உலகக்கோப்பை தொடராக இருக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
20 வருடங்களாக உலகத்தின் இரு பெரும் துருவமாக இருக்கும் 38 வயதான அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி, 41 வயதான போர்ச்சுக்கல் அணியின் ரொனால்டோ மற்றும் 2 பேருக்கு நிகராக உருவெடுத்த பிரேசில் அணியின் நெய்மர் ஆகிய 3 பேருக்கும் இதுவே இறுதிக்கோப்பை என்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
எனவே, அவர்களின் ஆட்டத்தை காண ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துக் கிடக்கிறார்கள். மூன்று பேரும் அடிக்கும் கோல்கள், கால்பந்து வரலாற்றில் முத்திரை பதிக்க போகிறது.
2022ம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பையில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.
உலகக் கோப்பையை வென்ற மெஸ்ஸி
இதன்மூலம் மெஸ்ஸி, தனது நீண்டநாள் ஏக்கமான உலகக் கோப்பையை வென்று தனது கால்பந்து வாழ்க்கையை முழுமையாகியுள்ளார்.
கனவோடு காத்திருக்கும் ரொனால்டோ
முக்கியக் கோப்பைகளை வென்ற ரொனால்டோவுக்கு இதுவரை வெல்லாத ஒரே முக்கியக் கோப்பையாக உலகக்கோப்பை திகழ்கிறது. இதனால் அவருக்கு அந்தக் கோப்பையை வெல்லும் ஒரே வாய்ப்பாக இந்த தொடர் இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கோப்பை வென்றால் ரூ.476 கோடி பரிசு!
39 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த உலகக்கோப் பையில் 9 ஆசிய அணிகள் பங்கேற்றுள்ளன. மொத்தமாக 1,248 வீரர்கள் விளையாடவிருக்கும் சூழலில் இதில் 357 மட்டுமே அனுபவம் வாய்ந்த வீரர்களாக உள்ளனர், மீதமுள்ள 891 பேர் முதல்முறையாக உலகக் கோப்பையில் கலக்க உள்ளனர்.
இந்த முறை 48 அணிகள் பங்கேற்பதால், அவை தலா 4 அணிகளாக மொத்தம் 12 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
நியூ ஜெர்ஸியில் இறுதிப்போட்டி
போட்டியின் காலிறுதி, அரையிறுதி ஆட்டம் மற்றும் இறுதி ஆட்டம் என அனைத்தும் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் விளையாடப்படவுள்ளன. இந்த மைதானம் மொத்தம் 82,500 பேர் அமரும் இடவசதி கொண்டதாகும்.
உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் கோப்பை வெல்லும் அணிக்கு ரூ.476 கோடி ரொக்கப் பரிசாக வழங்கப்படவுள்ளது.
போட்டி மொத்தத்துக்குமான பரிசுத் தொகையாக, ரூ.6,236 கோடியை ஃபிஃபா ஒதுக்கீடு செய்துள்ளது.
டிராபியின் மதிப்பு மட்டும் 191 கோடியாகும்.
======