இந்தியாவுடனான போட்டிகள் புறக்கணிப்பு
Pakistan reverses decision on T20 World Cup India match : 10ஆவது டி20 ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் வங்கதேசம் நீக்கப்பட்ட நிலையில், அந்நாட்டுக்கு ஆதரவளிக்கும் விதமாக, இந்தியாவுக்கு எதிரான போட்டிகளை தாங்கள் புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிப் அறிவித்திருந்தார்.
இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் தரப்பில் 5 நிபந்தனைகள்
இந்த விவகாரம் பரபரப்பான நிலையில், இந்த அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெறாவிட்டால், 4,500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என கூறப்பட்டது.
இதனிடையே, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியங்களுடன் ஐசிசி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அப்போது, இந்தியாவுடனான போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றால் தங்களது 5 நிபந்தனைகளை ஐசிசி ஏற்க வேண்டும் என பாகிஸ்தான் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
வங்கதேசத்தில் ஐசிசி தொடர் நடத்த வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை
அதன்படி, உலகக் கோப்பையில் விளையாடாத வங்கதேச அணிக்கு, ஐசிசி-யின் முழு வருவாய் பகிர்வும் கிடைக்க வேண்டும் என பாகிஸ்தான் கேட்டுக்கொண்டது.
அந்த கோரிக்கையை ஏற்ற ஐசிசி, வங்கதேச கிரிக்கெட் போர்டு தண்டிக்கப்படாது என ஏற்கெனவே முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்தது.
அடுத்ததாக, வங்கதேசத்துக்கான இழப்பீடாக அந்நாட்டில் ஐசிசி தொடர் ஏதாவது நடத்த வேண்டும் என பாகிஸ்தான் கோரியது.
மறுத்த ஐசிசி
அதற்கு பதில் கூறிய ஐசிசி, இளையோர் உலகக் கோப்பை குறித்து பரிசீலிக்கப்படும் என்றது. அதேபோல இந்தியா - பாகிஸ்தான் மட்டும் விளையாடும் இருதரப்பு தொடர் நடத்தப்பட வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையை பாகிஸ்தான் முன்வைத்தது.
ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்த ஐசிசி, இது அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட ஒன்று எனவும் இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கும் பொருந்தும் எனவும் விளக்கமளித்தது.
முடிவு நாங்கள் எடுக்கமுடியாது என்று ஐசிசி பதில்
அடுத்ததாக இந்தியா- பாகிஸ்தான்-வங்கதேசம் இடையே முத்தரப்பு தொடர் வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி, அதை தாங்கள் முடிவு செய்ய இயலாது என்றது.
அதேபோல வங்கதேசத்துக்கு சென்று இந்திய அணி விளையாடுவதாக திட்டமிடப்பட்ட தொடர் நடக்க வேண்டும் என்ற கோரிக்கையிலும் தாங்கள் தலையிட முடியாது என ஐசிசி வெளிப்படையாக கூறி கைவிரித்தது.
நட்பு நாடுகள் கோரிக்கைகளின்படி ஒப்புதல்
மேலும், இந்தியாவுடனான போட்டிகள் குறித்து, 24 மணி நேரத்திற்குள் முடிவு எடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஐசிசி கெடு விதித்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது. நட்பு நாடுகள் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்ந்த குழப்பம்
போட்டி நடக்குமா நடக்காதா என கடந்த சில நாட்களாக நீடித்து வந்த குழப்பம், பாகிஸ்தானின் இந்த அறிவிப்பால் தற்போது தீர்ந்துள்ளது.
அதன்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி, திட்டமிட்டபடி வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது என்பது குறிப்படத்தக்கது.