ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர்
Pakistan will boycott T20 World Cup match against India : ஐசிசி நடத்தும் டி20 உலகக்கோப்பை 2026 தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்குகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் கூட்டாக நடைபெறும் இந்த பிரம்மாண்ட தொடருக்கு ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
பிப்ரவரி 7ம் தேதி தொடக்கம்
பிப்ரவரி 7 ஆம் தேதி உலகக்கோப்பை தொடர் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
அமெரிக்காவுடன் மோதும் இந்தியா
இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பிப்ரவரி 7 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது.
இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் மறுப்பு
டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் எனப் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த முடிவு வெறும் அரசியல் ரீதியானதல்ல, இது சர்வதேச கிரிக்கெட் பொருளாதாரத்தையே ஆட்டிப் படைக்க போகிறது.
ஐசிசி கடும் அதிருப்தி
ஆம், இந்தியா - பாகிஸ்தான் போட்டி ரத்தானால் சுமார் 4,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். எனவே, பாகிஸ்தானின் இந்த முடிவால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீண்ட கால விளைவுகளை யோசித்துப் பார்க்க வேண்டும். இந்த முடிவு உலக கிரிக்கெட் அமைப்பையே பாதிக்கும்" என ஐசிசி எச்சரித்துள்ளது.
வருவாயை ஈட்டும் போட்டி
உலகக் கோப்பைத் தொடரிலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிதான் வருவாய் ஈட்டித் தரும் மிக முக்கியப் போட்டியாகும். இந்தப் போட்டியின் மதிப்பு மட்டும் சுமார் 500 மில்லியன் டாலர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் 4,500 கோடி ரூபாய் ஆகும்.
விளம்பர நிறுவனங்கள் பாதிப்பு
வேறு எந்தக் கிரிக்கெட் போட்டிக்கும் இவ்வளவு பெரிய வர்த்தக மதிப்பு கிடையாது. விளம்பர வருவாய் இழப்பு இந்தப் போட்டி ரத்தானால் முதலில் பாதிக்கப்படப் போவது ஒளிபரப்பு நிறுவனங்கள்தான். இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது வெறும் 10 விநாடி விளம்பரத்திற்கு 25 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் வரை கட்டணம் இருக்கும்.
நஷ்டஈடு கோர வேண்டி இருக்கும்
இது இறுதிப் போட்டியை விடவும் அதிகமான தொகையாகும். விளம்பர வருவாயில் மட்டும் சுமார் 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. ஒளிபரப்பு உரிமத்தை வைத்துள்ள ஜியோ ஸ்டார் நிறுவனம், போட்டி ரத்தானால் ஐசிசியிடம் நஷ்ட ஈடு கோரவும் வாய்ப்புள்ளது.
பிசிசிஐ-க்கும் இழப்பு
ஐசிசி நிதியை மட்டுமே நம்பி இயங்கும் சிறிய கிரிக்கெட் நாடுகள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படும். போட்டி ரத்தானால் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆகிய இரண்டுக்கும் தலா 200 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
பாகிஸ்தானால் தாங்க முடியாது
இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) பொருளாதார ரீதியாக மிகவும் வலுவாக இருப்பதால், இந்த இழப்பை எளிதாகச் சமாளித்துவிடும். ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் இதைத் தாங்க முடியாது.
ஐசிசியின் மொத்த வருவாயில் ஆண்டுக்கு சுமார் 280 கோடி பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்படுகிறது. ஐசிசி விதிமுறைகளை மீறி போட்டியை புறக்கணித்தால், இந்த நிதி பாகிஸ்தானுக்கு கிடைக்காமல் போகலாம். மேலும், ஒப்பந்தத்தை மீறியதற்காக அபராதமும் செலுத்த வேண்டி இருக்கும்.
இந்த நடவடிக்கைகள், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை பெரும் நெருக்கடியில் தள்ளும். சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாத நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்படும்.
=======================