நவீன காலத்திற்கு ஏற்ப உலக நாடுகளுடன் போட்டி போடும் வகையில் இந்தியாவும் தன்னை தகவமைத்து வருகிறது. அந்த வகையில் டிஜிட்டல் புரட்சி, இந்தியாவில் பிரம்மிக்கத்த வளர்ச்சியை கண்டு வருகிறது. 2015ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி மத்தியில் ஆளும் பாஜக அரசால்,
டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது.
அறிவுசார் சமூகமாக இந்தியா :
பிரதமர் மோடியால் துவங்கி வைக்கப்பட்ட இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், இந்தியாவை டிஜிட்டல் துறையில் ஆற்றல் மிக்க ஒன்றாகவும், அறிவுசார் சமூகமாகவும் மாற்ற வேண்டும் என்பதே ஆகும்.
பெருநகரங்கள் தொடங்கி குக்கிராமம் வரை இன்று டிஜிட்டல் இந்தியா திட்டம் சாதனை படைத்து வருகிறது. இந்தத் திட்டம் அமலுக்கு வந்து இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இது குறித்து பெருமிதம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்த நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்றார். நமது நாட்டை டிஜிட்டல் ரீதியாக அதிகாரம் பெற்ற மற்றும் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய சமூகமாக மாற்றுவதற்கான ஒரு முயற்சியாக டிஜிட்டல் இந்தியா தொடங்கப்பட்டது.
10 ஆண்டுகளில் அபார வளர்ச்சி :
10 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு புதிய சகாப்தத்திற்கு வழிவகுத்துள்ள பயணத்திற்கு சாட்சியாக நாம் நிற்கிறோம். 140 கோடி இந்தியர்களின் கூட்டு முயற்சியால் இது சாத்தியமாகி இருக்கிறது.
டிஜிட்டல் கட்டணங்களில் இந்தியா பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளும் இந்த முயற்சியால் பயனடைந்துள்ளன. சாமான்ய மக்களும் டிஜிட்டல் முறைக்கு மாறி பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது இவ்வாறு பிரதமர் மோடி கருத்து தெரிவித்தார்.
====