AI Impact Summit 2026 Undersea cable routes for India : Sundar Pichai confirms Source : Google
இந்தியா

AI தகவல் பரிமாற்றம் : இந்தியாவுக்கு கடலுக்கு அடியில் கேபிள் வழித்தடங்கள் : சுந்தர் பிச்சை உறுதி

இந்தியா, அமெரிக்கா இடையே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப தகவல் பரிமாற்றத்துக்காக கடலுக்கு அடியில் புதிய கேபிள் வழித்தடங்களை நிறுவுவதற்கான திட்டத்தை கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அறிவித்தார்.

Baala Murugan

பிரதமர் மோடி பதிவு

Sundar Pichai Tweets : ஏஐ உச்சி மாநாட்டை (AI Impact Summit 2026) பிரதமர் மோடி டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார். பிப்ரவரி 20 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் 110க்கும் மேற்பட்ட நாடுகள், 45-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த உயர்நிலை குழுக்கள், 30 சர்வதேச அமைப்புகள், தொழிலதிபர்கள் மற்றும் பிரபல நிறுவனங்களை சார்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அந்த வகையில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இந்த மாநாட்டில் பங்கேற்க டெல்லிக்கு வருகை தந்துள்ளார்.

தமது இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வாக அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, '' சுந்தர் பிச்சையை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.

ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா மேற்கொண்டு வரும் பணிகள் மற்றும் இந்தத் துறையில் கூகுளுடன் நமது திறமையான மாணவர்கள் மற்றும் நிபுணர்கள் பணியாற்றுவதற்கான சாத்தியங்கள் குறித்து பேசினோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சுந்தர் பிச்சை பதிவு

அதேபோல சுத்தர் பிச்சை பதிவிட்டுள்ள பதிவில் ''இந்த அற்புதமான உச்சி மாநாட்டிற்கு எங்களை ஒன்றிணைத்த பிரதமர் மோடிக்கு நன்றி. அவரை சந்தித்தேன்.

அப்போது, இந்தியாவில் அனைத்து நிலைகளிலும் ஏஐ-ஐ புகுத்துதல், தகவல்களை அனைத்து மொழிகளிலும் அணுகுவதை விரிவுப்படுத்துதல், ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஆதரித்தல் மற்றும் விவசாயம் உள்ளிட்டவைகளில் கூகுளின் பங்களிப்பு குறித்து விவாதித்தோம்.'' என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த சுந்தர் பிச்சை

மேலும், டெல்லியில் நடைபெற்றுவரும் ஏஐ உச்சி மாநாட்டின் ஒருபகுதியாக, சுந்தர் பிச்சை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அ

ப்போது பேசிய அவர், ஏஐ தொழில்நுட்ப பயன்பாட்டை இந்தியாவில் பரவலாக்குவதற்கான கூகுள் நிறுவனத்தின் பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

இந்தியாவின் ஏஐ திறனைப் பற்றிய தனது பார்வையை பகிர்ந்த சுந்தர் பிச்சை, ''செயற்கை நுண்ணறிவில் இந்தியா ஒரு அசாதாரண பாதையை நோக்கி செல்ல தயாராக உள்ளது.

இந்தியாவின் தனித்துவமான பன்முகத்தன்மை, மொழிகள் மற்றும் வலுவான டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஆகியவை, புதுமைக்கான ஒரு மையமாகவும், உலகளவில் ஏஐ-யை பரவலாக்குவதற்கான வழியாகவும் அமைந்துள்ளது," என்றார்.

கேபிள் வழித்தடங்களை அமைக்கும் கூகுள்

"செயற்கை நுண்ணறிவு நம்பகமானதாகவும், பாதுகாப்பானதாகவும், அனைவருக்கும் உதவும் வகையிலும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அது உள்ளூர் மொழிகளைப் புரிந்துகொள்ளவும், பயனுள்ளதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருப்பது முக்கியம்," என்றார்.

"இந்தியா, அமெரிக்கா இடையே ஏஐ தொழில்நுட்ப தகவல் பரிமாற்றத்துக்காகவும். தகவல் தொழில்நுட்ப இணைப்பை மேம்படுத்தும் நோக்கிலும் கடலுக்கு அடியில் கேபிள் வழித்தடங்களை நிறுவுவதற்கான மெகா திட்டத்தை கூகுள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

30 மில்லியன் டாலர்களில் மெகா திட்டம் செயல்படுத்தப்படும்

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் 15 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏஐ மையமும் அமைக்கப்பட உள்ளது. கூகுளின் இந்த முன்னெடுப்புகள் நாட்டிற்கு புதிய வேலைவாய்ப்புகளையும், மேம்பட்ட ஏஐ உள்கட்டமைப்பையும் கொண்டு வரும். 1.1 கோடி மாணவர்கள் மற்றும் 2 கோடி அரசுப் பணியாளர்களை இலக்காகக் கொண்டு கூகுள் ஏஐ தொழில்முறை சான்றிதழ் பயிற்சி திட்டமும் கொண்டு வரப்படவுள்ளது.

இந்தியா முழுவதும் மொத்தம் 800 மாவட்டஙகள் மற்றும் 18 மொழிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் நாடு முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளின் ஆய்வுகள் ஏஐ தொழில்நுட்ப உதவிகளை பெறும் விதத்தில் தரம் உயர்த்தப்பட உள்ளன'' என்று சுந்தர் பிச்சை கூறினார்.

மேலும், "ஏஐ தொழில்நுட்ப பயன்பாட்டை தேசிய அளவில் பரவலாக்க இந்திய அரசு மற்றும் சென்னை ஐஐடி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும் கூகுள் திட்டமிட்டுள்ளது.

குவாண்டம் கம்ப்யூட்டிங், காலநிலை மாதிரியாக்கம் உள்ளிட்ட அறிவியல் துறைகளில் ஏஐ தொழில்நுட்பத்தை கொண்டு ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் நோக்கில் 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான மெகா திட்டமும் செயல்படுத்தப்படும்" எனவும் அவர் தெரிவித்தார்.