ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம்:
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு எதிராக ஏர்செல் மேக்சிஸ் விவகாரத்தில் வழக்கு தொடர தேவையான அனுமதியைப் பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.
ப.சிதம்பரம் முறைகேடான ஒப்புதல்?
2006-ல் மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்திற்கு, உரிய வரம்பை மீறி, மலேசிய நிறுவனம் முதலீடு செய்ய முறைகேடாக ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படும் வழக்கு தான் ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் ஆகும்.
ப. சிதம்பரம் மீதான குற்றச்சாட்டு
₹600 கோடிக்கு அதிகமான முதலீடுகளுக்கு அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான குழுவிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்பது வரையறை.
அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடு
ஆனால் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, விதிமுறைகளுக்கு மாறாக, செயல்பட்டு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் மூலம் இதற்கு ஒப்புதல் அளித்ததாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை அறிவிப்பு
ஒரு பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக, 20.03.2006 அன்று அப்போதைய நிதியமைச்சரான ஸ்ரீ பி. சிதம்பரத்தால் மோசடியாகவும் நேர்மையற்றதாகவும் ஒப்புதல் வழங்கப்பட்டது,
அவர் மொத்த முதலீடு ரூ. 600 கோடி அல்லது அதற்கும் குறைவாக உள்ள அந்நிய நேரடி முதலீட்டு திட்டங்களை பரிசீலித்து அங்கீகரிக்கும் தகுதியுடையவர்.
சட்ட விரோதமாக ரூ. 1.16 கோடி
கார்த்தி பி. சிதம்பரத்தால் அவரது நிறுவனங்களான M/s அட்வாண்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் (ASCPL) மற்றும் M/s செஸ் மேனேஜ்மென்ட் ஆகியவற்றில் ரூ. 1.16 கோடி சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை
இந்த ஒப்பந்தத்தின் மூலம் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் குடும்பத்தினர் பலனடைந்ததாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ குற்றம் சாட்டி இருந்தது. இந்த வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
விசாரணை அனுமதி ஆணை
இந்த நிலையில் தான் தற்போது அமலாக்கத்துறையினர், டெல்லி ரூஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ப. சிதம்பரத்தை அரசு ஊழியராக கருத்தில் கொண்டு அவர் மீது வழக்கு தொடர்வதற்கான விசாரணை அனுமதியை சமர்ப்பித்துள்ளது.
அரசு ஊழியர்களை விசாரிக்க முன் அனுமதி
கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 6-ம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்படும் புகார்களுக்கும் அரசு ஊழியர்களை விசாரிக்கத் தேவையான முன் அனுமதி அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து இதுவரை நிலுவையில் உள்ள வழக்குகளில் ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பதற்காக பிப்ரவரி 10 ஆம் தேதியன்று உரிய அதிகாரிகளிடம் இருந்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்திற்கு எதிரான விசாரணை அனுமதி ஆணையை அமலாக்கத்துறை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் விசாரணை தொடக்கம்
நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விசாரணை அனுமதி ஆணையை சமர்ப்பித்து விட்டதால் , இனி இந்த வழக்கு நிலுவையில் இல்லாமல் விசாரணை விரைவு படுத்தப்படும் என்று தெரிகிறது.
இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிக்கையை அமலாக்கத்துறை தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ளது.