மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க
கர்நாடகாவில் 10ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பல முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இனிவரும் நாட்களில் மாணவர்களுக்கு பாடங்களின் மீதான கவனத்தை அதிகரிப்பதற்காக கர்நாடக அரசு இரவு 7:00 முதல் 9:00 வரை போன், டிவி’யை நிறுத்த அலாரம் வைக்க ஏற்பாடு செய்துள்ளது.
வட்டார கல்வி அதிகாரியின் அதிரடி நடவடிக்கை
கர்நாடகாவில் ஆண்டுதோறும் 10ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தான் வட்டார கல்வி அதிகாரி ரங்கசாமி ஷெட்டி என்பவர் இந்த அலாரம் வைக்கும் முறையை தொடங்கியுள்ளார்.
பெற்றோர்களை சந்தித்து அறிவுறுத்தல்
கர்நாடகா கலகபுரி மாவட்டம் ஆலந்த் தாலுகாவைச் சேர்ந்த கல்வி அதிகாரி கடந்த டிசம்பர் மாதத்தில் கின்னிசுல்தான் கிராமத்தில் 10ஆம் வகுப்பு படிக்கும் சுமார் 20 மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்து பேசியுள்ளார்.
குழந்தைகளின் படிப்பில் பெற்றோரின் பங்கு
அப்போது, அவர்களின் குழந்தைகள் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்றால் அதில் பெற்றவர்களின் பங்கும் முக்கியம் . அதனால் தினமும் இரவு 7 மணி முதல் 9 மணிவரை கட்டாயமாக இந்த 2 மணிநேரத்தில் அவர்களை மொபைல் போன் மற்றும் டிவி’யை பயன்படுத்தவிடக் கூடாது என்று கூறியுள்ளார். மேலும் அந்த நேரத்தில் பெற்றோர்களும் அவற்றை பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
படிப்பில் மாணவர்களுக்கு நாட்டம் அதிகரிப்பு
அப்போது தான் அவர்களுக்கு பாடத்தின் மீதும் படிப்பின் மீதும் நாட்டம் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அன்றுமுதல் தினமும் அந்த கிராமத்திற்கு சென்று மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களையும் தீர்த்து வருகிறார். இதன் காரணமாக மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
வரவேற்பை பெற்ற அலாரம் முறை
வட்டார கல்வி அதிகாரியின் இந்த முயற்சி வரவேற்பை பெற்ற நிலையில், மாவட்டம் தோறும் அந்தந்த கல்வி அதிகாரிகள் இந்த நடைமுறையை மாணவர்கள், பெற்றோரிடையே நடைமுறைபடுத்த வேண்டும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
அலாரம் ஒலி எழுப்ப வேண்டும்
மேலும், இந்த நடைமுறையை ஒவ்வொரு கிராமத்திலும் நடைமுறை படுத்துவது மட்டுமில்லாமல் தண்டோரா அடித்து ஒலி எழுப்ப வேண்டும் என்று கூறியுள்ளது. இரவு 7 மணி தொடங்கியதும் ஒரு ஒலி எழுப்ப வேண்டும் அதேபோல் 9 மணி முடிந்ததும் ஒலி எழுப்ப வேண்டும் என்று அறிவித்துள்ளது.
வரவேற்பை பெறும் தண்டோரா முறை
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒலிக்கப்படும் இந்த தண்டோர முறை கர்நாடகாவில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
குறைந்தபட்ட தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு
நடப்பாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 18ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஏற்கெனவே மாணவர்களின் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 100க்கு 35-ல் இருந்து 33 ஆக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.