Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu inaugurated the gold mining operations at Jonnagiri in the state google
இந்தியா

”ஜொன்னகிரி தங்கச் சுரங்கம்” : தொடங்கி வைத்தார் முதல்வர் சந்திரபாபு நாயுடு : 50 டன் தங்கம், 700 பேருக்கு வேலைவாய்ப்பு!

ஆந்திராவில் ஜொன்னகிரி தங்கம் சுரங்க பணிகளை, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்.

Kannan

கோலார் தங்கச் சுரங்கம்

இந்தியாவில் தங்கம் சுரங்கம் என்றால் கர்நாடக மாநிலம் கோலார் தான். இங்கு இருந்து தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வந்த நிலையில், தங்க இருப்பு குறைந்ததால் 25 ஆண்டுகளுக்கு முன்பே பணிகள் நிறுத்தப்பட்டு விட்டன.

வட மாநிலங்களில் உள்ள சுரங்கங்களில் இருந்து ஆண்டுக்கு வெறும் ஒன்றரை டன் தங்கம் மட்டுமே கிடைக்கிறது. இதனால், தங்க கொள்முதல் அதிகமாக இருப்பதால், அரசுக்கு அந்நிய செலாவணி கூடுதலாக செலவாகிறது.

ஜொன்னகிரியில் தங்கச் சுரங்கம்

இந்தச்சூழலில், மகிழ்ச்சிக்குரிய செய்தியாக, ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜொன்னகிரியில் பூமிக்கடியில் தங்கம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

களத்தில் தனியார் நிறுவனங்கள்

இதற்கான பணிகளை தனியார் நிறுவனங்கள் மேற்கொண்டன. அதன்படி, இந்தியாவில் முதன்முறையாக தனியார் சார்பில் தங்க சுரங்கம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

ரூ.405 கோடி முதலீடு

ஜியோ மைசூர் சர்வீசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் டெக்கான் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ரூ.405 கோடி முதலீட்டில் தங்கம் வெட்டி எடுப்பதற்காக ஆலையை ஜொன்னகிரியில் அமைத்துள்ளன.

1,500 ஏக்கரில் சுரங்கம்

இதற்காக மாநில அரசு 1,500 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. தற்போது ​​ முதற்கட்டமாக 600 ஏக்கரில் சுரங்கப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதற்கேற்ப பதப்படுத்தும் ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆந்திர முதல்வர் தொடங்கி வைத்தார்

இந்நிலையில் ஜொன்னகிரி தங்கச்சுரங்க திட்டத்தை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். இங்கு ஆண்டுக்கு ஒரு டன் தங்கம் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

முதல் ஆண்டில் 400 கிலோ தங்கம்

முதல் ஆண்டிலேயே 400 கிலோ கிராம் தங்கம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

700 பேருக்கு வேலைவாய்ப்பு

தங்கச் சுரங்கத் திட்டத்தின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரங்கத் திட்டம் அமைந்துள்ள ஜொன்னகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படும். சமூகப் பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் வழி கிடைத்துள்ளது.

==============