asetback for Mamata Banerjee in West Bengal, dissidents have taken over her party headquarters google
இந்தியா

"கைவிட்டு போன TMC தலைமையகம்” : மம்தாவுக்கு பெரும் பின்னடைவு : கைப்பற்றிய எதிர்ப்பு குழுவினர்....!

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு மேலும் ஒரு பின்னடைவாக அவரது கட்சி தலைமையகத்தை அதிருப்தியாளர்கள் கைப்பற்றி இருக்கிறார்கள்.

Kannan

திரிணாமூல் காங்கிரசில் பிளவு

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசில் பிளவு ஏற்பட்டுள்ளது.

அதிருப்தியாளர்கள் போர்க்கொடி

அதிருப்தி தலைவர் ரிதாப்ரதா தலைமையில் 60 எம்எல்ஏக்கள் தனியாக பிரிந்தனர். அவர்களுக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து வழங்கப்பட்டது. தேர்தல் ஆணையத்திடம் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கான உரிமையை கோரியுள்ளனர்.

தேர்தல் ஆணையம் பரிசீலனை

இந்த மனுவுக்கு 6ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க மம்தா மற்றும் ரிதாப்ரதா பானர்ஜி தலைமையிலான குழுவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

லோக்சபா எம்பிக்கள் 20 பேர் வேறு கட்சிக்கு தாவி, மத்திய பாஜக அரசை ஆதரிக்கின்றனர். ராஜ்யசபா எம்பிக்கள் 3 பேர் ராஜினாமா செய்து விட்டதால், இடைத்தேர்தல் வர இருக்கிறது.

மம்தாவிற்கு நாலா பக்கமும் நெருக்கடி

இப்படி எந்தப் பக்கம் பார்த்தாலும், மம்தா பானர்ஜிக்கு நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. கட்சி அவர் கையை விட்டு போய்விட்டது அப்பட்டமாக தெரிகிறது.

அதிருப்தியாளர்கள் வசமான கட்சி தலைமையகம்

இந்த நிலையில் கொல்கத்தாவில் உள்ள திரிணாமூல் கட்சியின் அமைப்பு ரீதியான தலைமையகத்தை ரிதாப்ரதா தலைமையிலான குழுவினா் கைப்பற்றினர்.

கொல்கத்தா ஈஎம் பைபாஸில் இருந்த கட்சியின் தலைமை அலுவலகம் மறுசீரமைப்புப் பணிகளுக்காக மாற்றப்பட்ட பிறகு, 2022 முதல் ‘மெட்ரோபாலிட்டன்’ பகுதியில் உள்ள அலுவலகமே கட்சியின் செயல்பாட்டுத் தலைமையகமாகத் திகழ்ந்து வருகிறது.

கட்சி தலைமையகத்திற்குள் நுழைவதன் மூலம் தங்கள் அங்கீகாரத்திற்கான உரிமையை வலுப்படுத்த அதிருப்தியாளர்கள் முயன்றனர்.

உரிமையை நிலைநாட்டிய அதிருப்தியாளர்கள்

அதிருப்தி அணியில் உள்ள பிர்ஹாத் ஹக்கீம், ஜாவேத் கான், சந்தீபன் சாஹா மற்றும் அக்ருஸ்ஸமான் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் அலுவலகத்திற்குச் சென்ற ரிதாப்ரதா, அங்கு ஒரு கூட்டத்தை நடத்தினார்.

தனது தரப்பினரே உண்மையான திரிணாமுல் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அவர் வலியுறுத்தினார்.

கட்சி தலைமையகமும் கைவிட்டு போகும் சூழல் உருவாகி இருப்பது, அரசியல் ரீதியாக மம்தாவுக்கு பெரிய சறுக்கலாக பார்க்கப்படுகிறது.

=======================================