குஜராத் உள்ளாட்சி தேர்தல்
குஜராத் மாநிலத்தில் உள்ள 15 மாநகராட்சிகள், 84 நகராட்சிகள், 34 மாவட்ட பஞ்சாயத்துகள், 260 தாலுகா பஞ்சாயத்துகளுக்கு கடந்த 26ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
மூன்று முனைப்போட்டி
பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவியது. யார் அதிக இடங்களை கைப்பற்றுவது என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது.
மாநகராட்சிகளை கைப்பற்றிய பாஜக
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மாநிலத்தில் உள்ள 15 மாநகராட்சிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
கடைநிலை ஊழியர் to கவுன்சிலர்
இதில் மேசனா மாநகராட்சியில் வார்டு எண் 13-ல் போட்டியிட்ட பாஜகவின் ரமேஷ்பாய் பெற்ற வெற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாஜக அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக, தேநீர் வழங்குவது மற்றும் கோப்புகளைப் பராமரிப்பது போன்ற பணிகளில் இருந்த அவர் இன்று கவுன்சிலராகி இருக்கிறார்.
ரமேஷ்பாய் மகிழ்ச்சி
வட குஜராத்தில் அடிமட்ட அரசியல் முன்னேற்றத்தின் அடையாளமாக இது பார்க்கப்படுகிறது. தனது வெற்றி பற்றி பேசும் ரமேஷ்பாய், "நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு பணியாற்றுவேன். நான் 28 ஆண்டுகளுக்கும் மேலாக உதவியாளராகப் பணியாற்றினேன்" என்றார்.
மோர்பி மாநகராட்சி - பாஜக 100% வெற்றி
இந்தத் தேர்தலில், மோர்பி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 52 இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ், ஆம் ஆத்மிக்கு ஓர் இடம் கூட கிடைக்கவில்லை. இதன்மூலம் எதிர்க்கட்சிகளே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ், ஆம் ஆத்மி படுதோல்வி
எதிர்பார்த்தபடியே பாஜக தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டியுள்ளது. போட்டியாக நின்ற காங்கிரஸ் கட்சியின் நிலை கவலைக்கிடம் என்றால், கடந்த முறை அதிரடி காட்டிய ஆம் ஆத்மி கட்சியும் இந்த முறை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.
பாஜகவிற்கு கிடைத்து இருக்கும் இந்த வெற்றி 2027 சட்டமன்றத் தேர்தலில்எதிரொலிக்க வாய்ப்புள்ளது.
========