பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு (CCEA), இந்திய ரயில்வேயின் 8 முக்கிய மல்டி-டிராக்கிங் (Multi-Tracking) திட்டங்களுக்கு ₹20,804 கோடி மதிப்பில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த திட்டங்கள் தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளன.
இந்த 8 திட்டங்களின் மூலம் சுமார் 1,196 கிலோமீட்டர் அளவுக்கு ரயில் பாதை திறன் அதிகரிக்கப்படுகிறது.
அதிக நெரிசல் காணப்படும் வழித்தடங்களில் கூடுதல் பாதைகள் அமைக்கப்படுவதால் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களின் இயக்கம் வேகமாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தென் மாநிலங்களுக்காக மட்டும் ₹10,021 கோடி மதிப்பில் 5 திட்டங்கள் ஒப்புதல் பெற்றுள்ளன. அவை:
அரக்கோணம் – ரேணிகுண்டா 3 மற்றும் 4வது பாதைகள் (77 கி.மீ)
ஒயிட்ஃபீல்ட் – பங்கார்பேட் 3 மற்றும் 4வது பாதைகள் (47 கி.மீ)
ஓசூர் – ஓமலூர் இரட்டை பாதை திட்டம் (147 கி.மீ)
சேலம் – கரூர் – திண்டுக்கல் இரட்டை பாதை திட்டம் (159 கி.மீ)
செகுந்தராபாத் – காஜிபேட் மல்டி டிராக்கிங் திட்டம் (110 கி.மீ)
இந்த 8 திட்டங்களும் முடிவடைந்தால் சுமார் 6,900 கிராமங்களுக்கு மேம்பட்ட ரயில் இணைப்பு கிடைக்கும். மொத்தம் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் நேரடியாக பயனடைவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நிலக்கரி, சிமெண்ட், இரும்பு, எஃகு, உணவுப் பொருட்கள், உரங்கள், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறைகளுக்கான சரக்கு போக்குவரத்து திறன் ஆண்டுக்கு கூடுதலாக 74 மில்லியன் டன் வரை உயர்த்தப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் லாஜிஸ்டிக்ஸ் செலவுகள் குறைய வாய்ப்பு உள்ளது.
PM Gati Shakti திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த ரயில்வே பணிகள் 2029-30ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
திட்டங்கள் முடிந்த பிறகு ரயில் நெரிசல் குறைந்து, சேவையின் நம்பகத்தன்மை மற்றும் வேகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
================