குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கங்களை அகற்ற உத்தரவு :
சமூக வலைத்தள நிறுவனமான மெட்டா (Meta) தனது தளங்களான Facebook, Instagram மற்றும் WhatsApp-ல் குழந்தைகள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோக (CSAM) உள்ளடக்கங்கள் மற்றும் அதனை விளம்பரப்படுத்தும் பதிவுகள் பரவியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய சட்டங்களை மீறும் எந்த நிறுவனத்திற்கும் "Safe Harbour" எனப்படும் சட்ட பாதுகாப்பு வழங்கப்படாது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குழந்தைகள் பாதுகாப்பில் அரசு கவனம்:
சமீபத்தில் வெளியான விசாரணை அறிக்கைகள், Instagram-ல் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கங்களை நோக்கி வழிநடத்தும் விளம்பரங்கள் இருந்ததாக குற்றம்சாட்டின.
இதையடுத்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மெட்டாவிடம் விளக்கம் கேட்டு, சம்பந்தப்பட்ட அனைத்து பதிவுகளையும் உடனடியாக அகற்ற உத்தரவிட்டது.
சட்டத்தை மீறினால் பாதுகாப்பு இல்லை:
இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் சமூக ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் இடைத்தரகர் (Intermediary) பாதுகாப்பு, சட்ட விதிகளை பின்பற்றும் வரை மட்டுமே செல்லுபடியாகும்.
சட்டவிரோத உள்ளடக்கங்களை அகற்றத் தவறினால் அல்லது போதிய கண்காணிப்பு மேற்கொள்ளாவிட்டால், அந்த பாதுகாப்பை இழக்க நேரிடும் என அரசு தரப்பு மெட்டாவிடம் தெளிவாக தெரிவித்துள்ளது.
மன்னிப்பு கோரிய மெட்டா :
இந்த விவகாரம் தொடர்பாக மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க், இந்திய அரசிடம் மன்னிப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கங்கள், டீப் ஃபேக் பதிவுகள் மற்றும் செயல்பாட்டு குறைபாடுகள் குறித்து நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை:
இந்த விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் (NCPCR) விசாரணையை தொடங்கியுள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளை மீறியதாக உறுதியானால், மெட்டா மீது கூடுதல் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.