மேகேதாட்டு அணை விவகாரம்
மேகேதாட்டு என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடகா அரசு முழுவீச்சில் களமிறங்கி இருக்கிறது. அப்படி அணை கட்டப்பட்டால், தமிழகத்திற்கு காவிரி நீர் என்பதே கனவாகி விடும்.
டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும். சாகுபடி என்பதே கேள்விக்குறியாகி விடும். எனவே, தமிழகம் புதிய அணை கட்ட கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறது.
பெங்களூரு செல்கிறாரா முதல்வர் விஜய்?
இதனிடையே, காவிரியில் தமிழகத்திற்கான உரிய நீரை பெறவும். மேகேதாட்டு அணை பற்றி பேச்சுவார்த்தை நடத்தவும் முதல்வர் விஜய் ஆகஸ்டு 3ம் தேதி பெங்களூரு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு பாமக, திமுக, உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ராஜ்யசபாவில் அன்புமணி கேள்வி
பாமக தலைவர் அன்புமணி எம்.பி. காவிரி மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகத்திற்கு கேள்வி எழுப்பியிருந்தார்.
மத்திய அரசு பதிலளிக்க கோரிக்கை
அதில், “காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு கட்டுமானத்தையும் அமைப்பதற்கு, ஆற்றின் மேல்மடை மாநிலமான கர்நாடகா, கீழ்மடை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகியவற்றின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக பிப்ரவரி 2018-ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து மத்திய அரசுக்குத் தெரியுமா?
தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை
இதற்கு பதில் அளித்து ஜல்சக்தி துறை இணை அமைச்சர் ஸ்ரீ ராஜ் பூஷன் சவுத்ரி, ”காவிரி பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த 2018 பிப்.16-ம் தேதி அளித்த தீர்ப்பில்,காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டுமானத்தையும் கட்ட தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடகா பெறவேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.
தமிழகத்திற்கு பின்னடைவு
நடுவர் மன்றதீர்ப்பின் ஒரு பகுதியாக, காவிரிநீரை அந்தந்த மாநிலத்தில் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் உள்ளிட்ட தங்களது தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளவும், பலனை அனுபவிக்கவும், திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் எந்த கட்டுப்பாடும் இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேகேதாட்டு அணையைப் பொருத்தவரை, திட்ட அறிக்கை அளிக்கப்பட்டது. அதுகுறித்த விரிவான அறிக்கையை தீர்ப்பாய ஒப்புதலோடு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் பிலிகுண்டுலுவில் கர்நாடகா உறுதி செய்யப்பட வேண்டிய நீர்வரத்து 9.19 டிஎம்சி. ஆனால் வந்தது 2.195 டிஎம்சி. ஜூலை மாதம் வர வேண்டியது 31.24 டிஎம்சி. ஆனால் வந்தது 0.459 டிஎம்சி. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு பாதிப்பு, கர்நாடகாவிற்கு சாதகம்
காவிரி குறுக்கே கட்டுமானம் மேற்கொள்ள தமிழ்நாடு ஒப்புதலைப் பெற வேண்டும் என 2018ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு தரவில்லை. தீர்ப்பாயம் உத்தரவு முரணாக இல்லாத வகையில் மாநில எல்லைக்குள் நீரை அனுபவிக்க அதிகாரம் உள்ளது என மத்திய அரசு தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
===============================
.