CM Chandrababu Naidu stated that if Ganga and Cauvery rivers are interlinked, nothing can stop India's growth google
இந்தியா

”கங்கை - காவிரி இணைப்பு” : இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது : அடித்து சொல்லும் சந்திரபாபு நாயுடு...!

கங்கை மற்றும் காவிரி நதிகளை இணைத்தால், இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Kannan

துங்கபத்திரா அணை

கர்நாடகாவின் கொப்பலில் உள்ள துங்கபத்ரா அணையில் 19வது மதகு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. எனவே, அணையில் உள்ள 33 மதகுகளை புதிதாக மாற்ற முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்தன.

புதிய மதகுகள் திறப்பு

பணிகளை நிறைவு பெற்றதை தொடர்ந்து, புதிய மதகுகளை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் திறந்து வைத்தார். ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களுக்கும் ஜீவ ஆதாரமாகத் திகழ்ந்து வருகிறது துங்கபத்ராவின் அணை.

3 மாநில முதல்வர் பங்கேற்பு

கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தலைமையில் நடந்த விழாவில், சிறப்பு விருந்தினர்களாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மூன்று மாநிலங்களுக்கும் பாராட்டு

விழாவில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பேசுகையில், ”மூன்று மாநில விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க 3 மாநிலங்களும் இணைந்து பரந்த நோக்கத்துடன் இந்த நற்செயலைச் செய்து முடித்துள்ளன.

இது இந்திய நீர்வளத் துறையின் வரலாற்றில் முக்கியமான தருணம். கடவுளின் ஆசியாலும் 3 மாநிலங்களின் ஒத்துழைப்பாலும் இந்த முக்கியமான பணியை விரைவாக செய்து முடிக்க எங்களால் முடிந்தது” என்றார்.

அதிகாரிகள், ஊழியர்களுக்கு பாராட்டு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், ‘‘துங்கபத்ரா அணையில் வெறும் 6 மாதங்களில் 33 மதகுகளைப் புதிதாக அமைத்த அனைவரையும் பாராட்டுகிறேன். தண்ணீர் பங்கீடு, அதன் நிர்வாகம் நமது அனைவருக்கும் உள்ள கடமையாகும்.

நதிநீர் இணைப்பு அவசியம்

நாட்டில் நதிநீர் இணைப்பு கட்டாயம் மட்டுமல்ல அவசியமும் கூட. கங்கை - காவிரி நதிகளை இணைப்பதன் மூலம் நமது நாடு செழித்தோங்கும். காவிரி - கோதாவரி நதிகளை இணைத்து நாட்டுடைமை ஆக்க வேண்டும்.

நதிநீர் திட்டங்கள் சிறப்பாகச் செயல் பட்டால்தான் வருங்கால சந்ததியினர் மகிழ்ச்சியுடன் வாழ முடியும்’’ என்று வலியுறுத்தினார்.

தென் மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் கைகோர்த்து நின்றால், கங்கை-காவிரி இணைப்பு விரைவில் சாத்தியமாகும் என்பதில் ஐயமில்லை.

=========================