சட்டமன்ற தேர்தல் - திமுக கூட்டணி
DMK DMDK CPIM Alliance Seat Sharing 2026 : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அட்டவணை ஓரிரு நாட்களில் வெளியாக இருக்கும் நிலையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரம் பெற்று இருக்கின்றன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக மற்றும் ஒருசில சிறிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்துள்ளது. அந்த வகையில், காங்கிரஸ் கடந்த தேர்தலை விட கூடுதலாக 3 தொகுதிகள், அதாவது 28 இடங்களில் போட்டியிடுகிறது.
திமுக கூட்டணியில் தேமுதிக
கட்சி தொடங்கி 20 ஆண்டுகள் வரை திமுக கூட்டணியை எட்டிப் பார்க்காத தேமுதிக, இந்த முறை கூட்டணிக்குள் வந்து ராஜ்யசபா சீட்டையும் பெற்று விட்டது.
எல்.கே. சுதீஷ் எம்பியாகி விட்டார். சட்டமன்ற தேர்தலிலும் அந்தக் கட்சிக்கு 8 இடங்கள் முதல் 10 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இடதுசாரிகள், விசிக அதிருப்தி
இதனால், திமுக கூட்டணியில் பல ஆண்டுகளாக இடம்பெற்று இருக்கும் இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கடும் அதிருப்தியில் உள்ளன.
இந்தக் கட்சிகளுக்கு கடந்த முறை கொடுக்கப்பட்டதை விட குறைவான இடங்கள் கிடைக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. ஏற்கனவே, மதிமுக கடந்த முறை 6 இடங்களில் போட்டியிட்ட நிலையில், இந்தமுறை 4 இடங்களில் தான் போட்டியிடுகிறது.
6 சீட் கிடைக்கவும் வாய்ப்பில்லை
புதிய கட்சிகள் வரவால், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகளுக்கு கடந்த முறை கொடுக்கப்பட்ட 6 சீட்களை கூட தர முடியாத நிலைக்கு திமுக தள்ளப்பட்டு இருக்கிறது.
தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக குழுவினருடன் இந்தக் கட்சிகளின் நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், “ போராட்டங்களில் ஈடுபட இருப்பதால், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சில நாட்கள் ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
இரட்டை இலக்க தொகுதிகள் வேண்டும்
இரட்டை இலக்கு தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அதையே திமுக குழுடமும் தெரிவித்திருக்கிறோம்.
புதிய கட்சிகள் தி.மு.க கூட்டணியில் இணைந்திருப்பதால் எதிர்பார்த்த தொகுதிகள் தருவது சிரமம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
காங்கிரசுக்கு மட்டும் கூடுதல் தொகுதிகளா?
இருந்தாலும், இதே சிரமத்திற்கு மத்தியில் தான் காங்கிரஸ் கட்சிக்கும் கூடுதலான தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இது எந்த வகையில் நியாயம்?.
தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதிகள்!
தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதிகள் வழங்கப்படும் என்று செய்திகள் வருகிறது. அவர்களுக்கு எல்லாம் கூடுதல் தொகுதிகள் வழங்கப்படும் போது இடது சாரி கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் தரமுடியாது என்று சொல்வதில் எந்த ஒரு நியாயமும் இல்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கறார்
ஆகவே கடந்த முறையை விட கூடுதலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதே எங்கள் முடிவு. இதை குழுவிடம் தெரிவித்திருக்கிறோம். அவர்கள் திமுகதலைவரிடம் பேசி தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.
ஆலோசித்து முடிவு எடுப்போம்
ஒன்றை இலக்கு தொகுதி தான் ஒதுக்கப்படும் என்றால் எங்கள் மாநிலக் குழு கூடி உரிய முடிவு எடுப்போம். மதவாத சக்திகளை எதிர்த்து போராடுவது எவ்வளவு முக்கியமோ அதைபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பலத்திற்கு ஏற்ப தொகுதியை பெறுவது என்பது ரொம்ப முக்கியம்” என்று பெ. சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதேபோன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், விடுதலை சிறுத்தைகளும் அதிருப்தியில் உள்ளன. எனவே, 2026 சட்டமன்ற தேர்தலை போன்று மக்கள் நலக் கூட்டணி 2.0 உருவாக வாய்ப்பு உள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதேசமயம், தொகுதி பங்கீடு விவகாரத்தில் திமுகவிற்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
====