Cyril Radcliffe, who drew the India-Pakistan border in 5 weeks and caused great atrocities, later regretted it greatly google
இந்தியா

”காலத்தின் கறுப்பு வரலாறு” : 5 வாரங்களில் எல்லையை பிரித்த 'சிரில் ராட்க்ளிஃப்' : கண்ணீரில் கரைந்த லட்சக்கணக்கானோர்...

இந்திய - பாகிஸ்தான் எல்லைக் கோட்டை 5 வாரங்களில் வரைந்து பெரும் கொடுமை நிகழ காரணமான 'சிரில் ராட்க்ளிஃப்', அதற்காக பிற்காலத்தில் பெரிதும் வருந்தினார்.

Kannan

ஒருநாட்டின் தலைவிதியை 5 வாரங்களில் தீர்மானிக்க முடியும் என்று காகிதத்தில் வரைந்து காண்பித்தவர் தான் 'சிரில் ராட்க்ளிஃப்'.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை

உலக வரலாற்றின் மிகவும் துயரமான சம்பவங்களில் ஒன்று தான் இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பிரிவினை.

பிரிட்டீஷ் வழக்கறிஞர் 'சிரில் ராட்க்ளிஃப்'

1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற போது, பாகிஸ்தான் தனி நாடாக பிரிக்கப்பட்டது. கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையையும் தேசத்தின் வரைபடத்தையும் தலைகீழாக மாற்றியது இந்தப் பிரிவினை.

இதற்கான கறுப்பு கோட்டை வரைந்து எல்லையை வகுத்தவர் பிரிட்டீஸ் வழக்கறிஞர் 'சிரில் ராட்க்ளிஃப்'.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லைக் கோடு என்பது வெறும் புவியியல் எல்லை மட்டும் கிடையாது. மிக அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு அது.

எல்லையை வரையறுக்க 5 வாரங்கள்

இந்தியாவைப் பற்றி முன் அனுபவமும்,பண்பாடு மற்றும் நிலப்பரப்பு குறித்த அடிப்படைப் புரிதலும் இல்லாத ராட்க்ளிஃபிடம், இந்த பொறுப்பை ஒப்படைத்த பிரிட்டீஷ் அரசு, பணிகளை முடிக்க வெறும் 5 வாரங்களை தான் கெடுவாக கொடுத்தது.

லண்டனில் அமர்ந்து எல்லையை வரைந்தார்

இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், ராட்க்ளிஃப் ஒருமுறை கூட இந்தியா வந்தது கிடையாது. எல்லையை தீர்மானிக்கும் பகுதியை பார்த்ததும் கிடையாது.

லண்டனில் அமர்ந்துகொண்டு பழைய வரைபடங்கள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு எல்லையை தீர்மானித்தார் அவர்.

காகிதத்தில் தீர்மானிக்கப்பட்ட எதிர்காலம்

பஞ்சாப் மற்றும் வங்காளத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்கள் எனப் பல்வேறு சமூக மக்கள் பல நூற்றாண்டுகளாக ஒன்றிணைந்து வாழ்ந்து வந்தனர்.

எனவே, எல்லையைத் துல்லியமாகப் பிரிப்பது சிக்கலாக இருந்தது.

ஒரே இரவு - பிளக்கப்பட்ட கிராமங்கள்

ஆனால், கால அவகாசம் மிகக் குறைவாக இருந்ததால், மக்களுடன் எந்தக் கலந்தாலோசனையும் இன்றி, நிலப்பரப்பை நேரில் பார்க்காமல் காகிதத்தில் கோடுகள் வரையப்பட்டன.

இதன் நேரடி விளைவாக, ஒரே இரவில் பல கிராமங்கள், தெருக்கள் மற்றும் வீடுகள் கூட இரண்டு நாடுகளுக்கு இடையே பாதியாகப் பிளக்கப்பட்டன.

மக்களிடையே பெரும் குழப்பம்

ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து, இந்த புதிய எல்லைக் கோடு பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன.

சொந்த ஊரும் வீடும் எந்த நாட்டுக்குள் வருகிறது என்றே தெரியாமல் மக்கள் திகைத்தனர். இதன் தொடர்ச்சியாக, மனித வரலாற்றிலேயே மிகக் கொடூரமான மற்றும் மிகப்பெரிய மக்கள் இடப்பெயர்வு நிகழ்ந்தது.

ஒரு நபரால் லட்சக் கணக்கானோர் பாதிப்பு

எல்லையைப் பிரித்தவருக்கு இந்தியாவின் மீதோ அல்லது அதன் மக்களின் மீதோ முறையான எண்ணமும் இல்லை, சரியான புரிதலும் இல்லை. ஆனால் அனைத்து பாதிப்புகளும் சாமான்ய மக்களுக்கு தான்.

ஆதாரங்களை அழித்த ராட்க்ளிஃப்

தான் மேற்கொண்ட பணி தவறு என்பதை பிற்காலத்தில் உணர்ந்த ராட்க்ளிஃப், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளால் அதிர்ச்சி அடைந்து, , தான் தயாரித்த வரைபடங்கள் மற்றும் குறிப்புகளை முழுமையாக அழித்தார்.

பணம் பெறாத ராட்க்ளிஃப்

பிரிட்டிஷ் அரசு இந்த வேலைக்காக வழங்க முன்வந்த கௌரவம், பணம் என எதையும் ஏற்றுக் கொள்ளவும் மறுத்து விட்டார்.

வெறும் காகிதத்தில் ராட்க்ளிஃப் வரைந்த கோடுகளின் தாக்கம் இன்று வரை காஷ்மீர், மேற்கு வங்கம் என்ன எல்லை பகுதிகளில் பிரச்னையாக நீடித்துக் கொண்டே தான் வருகிறது.

வரலாற்றில் கறுப்பு பக்கம்

கள புரிதல் இன்றி, மனிதநேய அணுகுமுறை இல்லாமல் எடுக்கப்படும் முடிவுகள், பல தசாப்தங்களை கடந்தும் நீடிக்கும் என்பதே, இந்தியா - பாகிஸ்தான் எல்லை பிரிப்பு உணர்த்தும் வரலாறு.

================