அகவிலைப்படி உயர்வு
Dearness Allowance hike : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
50 லட்சம் ஊழியர்களுக்கு பயன்
சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் இதன் மூலம் நேரடியாகப் பயனடைவார்கள். இந்த உயர்வு, 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு உயர்த்தப்பட்டுள்ளது.
அகவிலைப்படி, விலைவாசி உயர்வை (Inflation) ஈடுகட்டுவதற்காக அரசு ஊழியர்களுக்கு, ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதலாக கொடுக்கப்படுவதாகும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி வழக்கமாக ஆண்டுக்கு இருமுறை மாற்றியமைக்கப்படுவது நடைமுறை. அதன்படி, ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரவேண்டிய திருத்தப்பட்ட அகவிலைப்படி குறித்த அறிவிப்பு மார்ச் மாதத்திலும், ஜூலை 1 முதல் அமலாக வேண்டிய அறிவிப்பு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திலும் வெளியாகும்.
ரூ.1,000 வரை கிடைக்கும்
அடிப்படை ஊதியம் ₹18,000 கொண்ட ஊழியர்களுக்கு மாதம் ₹360-ம், ₹50,000 அடிப்படை ஊதியம் கொண்டவர்களுக்கு ₹1,000-ம் கூடுதலாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்தேதியிட்டு அமல்
ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். இதற்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 58% ஆக இருந்தது. இது 60 சதவீதமாக உயர்கிறது.
===========