ஐந்து மாநிலத் தேர்தல்
2026ம் ஆண்டு 5 மாநிலங்கள் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கின்றன. தமிழகத்துடன் சேர்ந்து கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகியவை தேர்தலை சந்திக்கின்றன.
தேர்தல் அட்டவணை
அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம் தேதியும், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 9-ம் தேதியும், மேற்கு வங்கம் மாநிலத்துக்கான தேர்தல் 2 கட்டங்களாக ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 24 ஆகியத் தேதிகளிலும் நடைபெறுகிறது.
5 மாநிலங்களிலும் அரசியல் களம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்...
தமிழகம்
2026 சட்டமன்ற தேர்தலில் ஆளும் திமுக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்புடன் 26 கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்திருக்கிறது.
எதிர்க்கட்சியான அதிமுகவும், பாஜக, அமமுக கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி இமைத்து தேர்தலை சந்திக்கிறது. ஆட்சியை கைப்பற்ற வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிசாமிக்கும் உள்ளது.
முதன்முறையாக தேர்தலை சந்திக்கும் நடிகர் விஜயின் தவெகவும், எம்ஜிஆர், என்டிஆர் போன்று முதல் தேர்தலிலேயே ஆட்சியை கைப்பற்ற துடிக்கிறது. விஜய்க்கு வரும் கூட்டம் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. யாருடனும் கூட்டணி கிடையாது என்ற நிலைப்பாட்டில் எப்போதும் உறுதியுடன் இருக்கும் சீமான் இந்த தேர்தலில் எத்தனை சதவீதம் வாக்குகளை பெறுவார் என்ற ஆர்வம் மேலோங்கி உள்ளது.
இதன் மூலம் தமிழத்தில் நான்கு முனைப்போட்டி என்பது உறுதியாகி விட்டது.
கேரளா
2021ல் 99 இடங்களை வென்ற இடது ஜனநாயக முன்னணி (LDF), கேரளா இதுவரை கண்டிராத சிறப்புமிக்க தொடர்ச்சியான மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது.
2021ல் 41 இடங்களில் மட்டுமே வெற்றி என்ற நிலையில் இருக்கும், ஐக்கிய ஜனநாயக முன்னணியும் (UDF) தேர்தலில் வெற்றிபெறத் துடிக்கிறது.
இதனிடையே, தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தனது இருப்பை வலுப்படுத்தும் வகையில், வாக்குகளை அள்ள முனைப்பு காட்டி வருகிறது.
ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி அலை யாருக்கு சாதகம் என்பதை தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும். பிகாரை போன்று கேரளாவிலும் சிறுபான்மை வாக்குகள் பாஜகவுக்கு கிடைத்தால், ஆட்சியை பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது.
மேற்கு வங்கம்
மேற்குவங்கத்தை பொறுத்தவரை 2021 தேர்தலில் 215 இடங்களை கைப்பற்றிய மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் வலுவாக உள்ளது. மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் மம்தா பானர்ஜி, இந்தமுறையும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.
கடந்தமுறை 77 இடங்களை கைப்பற்றிய பாஜக முக்கிய எதிர்க்கட்சியாக திகழ்கிறது. மூன்று முறை ஆட்சியில் இருக்கும் மம்தாவை வீழ்த்தி, மேற்கு வங்கத்தில் சாதிக்க பாஜகவும் முனைப்பு காட்டி வருகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும், காங்கிரசும் பெயரளவில் மட்டுமே செல்வாக்குடன் இருப்பதால், பெரிய அளவில் மாற்றங்களை கொண்டு வர வாய்ப்பில்லை.
புதுச்சேரி
2026 சட்டமன்ற தேர்தலுக்கான புதுச்சேரி அரசியல் களமும் பரபரப்பான சூழலில் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி முதல்வரும், என்ஆர் காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி, தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்கிறார். அவரது கட்சி 16 தொகுதிகளிலும், பாஜக 14 தொகுதிகளிலும் களம் காண்கின்றன. பாஜக சார்பில் அதிமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும்.
இந்தியா கூட்டணியை பொறுத்தவரை காங்கிரஸ், திமுக இடையே யார் பெரிய கட்சி என்ற மோதல் நீடிக்கிறது. உருவெடுத்துள்ளது. திமுக தொகுதிகளை குறைத்து கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. இதனால் புதுச்சேரி அரசியல் களம் பரப்பிற்கு பஞ்சமில்லாமல் உள்ளது.
அசாம்
126 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக கூட்டணி மீண்டும் தக்கவைக்கும் நோக்கில் முனைபுடன் செயல்பட்டு வருகிறது.
காங்கிரசிற்கு கடந்த தேர்தலில் 29 இடங்கள் மட்டுமே கிடத்திருந்தன. இத்தேர்தலில் பாஜக வென்றால், தொடர்ச்சியாக 3 வது முறை அசாமில் ஆட்சி அமைக்கும். அதை முறியடிக்க காங்கிரசும் முனைப்பு காட்டுகிறது.
====================