விண்வெளி ஆய்வு, சாதிக்கும் இந்தியா :
Gaganyaan Mission ISRO First Air Drop Test Update in Tamil : விண்வெளி ஆராய்ச்சி, செயற்கைக்கோள்களை செலுத்துவதில் இந்தியா தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. வணிக ரீதியாக பல்வேறு நாடுகளின் செயற்கைக்கோள்களை இந்தியா செலுத்தி வருகிறது. அண்மையில் இந்தியாவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி மையத்திற்கு வெற்றிகரமாக சென்று பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
ககன்யான் திட்டம் :
2027ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ(ISRO) இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு ககன்யான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன்படி, விண்வெளி வீரர்கள் ஒரு வார காலத்திற்கு விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்வார்கள். அதன் பிறகு, அவர்கள் பாதுகாப்பாக விண்கலத்தின் மூலம் பூமிக்குத் திரும்புவார்கள்.
விண்வெளிக்கு மனிதர்கள் செல்வதற்கு முன், இஸ்ரோ மூன்று முறை ஆளில்லா விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்பி, சோதிக்க உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் முதல் ஆளில்லா விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்படும்.
திருப்பி அழைத்து வரும் முயற்சி :
ககன்யான் திட்டத்தின் முக்கிய அங்கமான விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கான பாராசூட் சோதனை(Parachute Air Drop System Test) மேற்கொள்ளப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்தி, விண்வெளிப் பயணத்தில் புதிய மைல்கல்லை அடைந்து இருக்கிறது.
இஸ்ரோ புதிய மைல்கல் :
விண்கலம் பத்திரமாக கடலில் இறங்குதல் மற்றும் மீட்டெடுக்கும் செயல்முறையைச் சோதிக்கும் வகையில் பாராசூட் சோதனை நடத்தப்பட்டது. இஸ்ரோ, இந்திய விமானப்படை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO), இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகிய அமைப்புகளின் கூட்டு முயற்சியுடன் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் படிக்க : ’National Space Day’ ஆண்டுக்கு 50 ராக்கெட்கள்: பிரதமர் மோடி உறுதி
இது 100 சதவீதம் வெற்றிகரமாக இருந்ததாக இஸ்ரோ தெரிவித்து இருக்கிறது. ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதில் ஒரு முக்கிய படிநிலையை இந்தியா எட்டி இருக்கிறது. எனவே, ககன்யான் திட்டமும் முழு வெற்றி பெறும் என்பதில் ஐயமே இல்லை.
===================