Haryana Village Smashes 55 Smartphones to Fight Cyber Crime  source: Ai generated
இந்தியா

இப்படியும் ஒரு கிராமமா! : சைபர் குற்றங்களை ஒழிக்க 55 ஸ்மார்ட்போன்களை அடித்து உடைத்த மக்கள் : வீடியோ உள்ளே!

ஸ்மார்ட்போன்களை அடித்து உடைத்த கிராம மக்கள். இனிமேல் கீபேட் போன்களை மட்டுமே பயன்படுத்த முடிவு.

Kavitha prasanna

Haryana Village Smashes 55 Smartphones to Fight Cyber Crime

ஸ்மார்ட்போன்களை அடித்து உடைத்த கிராம மக்கள்

ஆசை ஆசையாகப் பணம் சேர்த்து வாங்கிய விலையுயர்ந்த ஸ்மார்ட்போனை யாராவது வேண்டுமென்றே தரையில் போட்டு உடைப்பார்களா? கண்டிப்பாய் மாட்டோம்.

ஆனால், வட மாநில கிராமம் ஒன்றில் ஒட்டுமொத்த மக்களும் ஒன்றுகூடி தங்களது விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களை தரையில் போட்டு சுக்குநூறாக அடித்து உடைத்துள்ளனர்.

ஹரியானா கிராம மக்களின் விநோத செயல்

ஹரியானா மாநிலம், நுஹ் மாவட்டத்தில் உள்ள சுக்புரி என்ற கிராமத்தில்தான் இந்த விசித்திரமான மற்றும் அதிரடியான சம்பவம் நடந்துள்ளது.

ஆரம்பத்தில், இது வெறும் மொபைல் போன் அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவதற்காக எடுக்கப்பட்ட முடிவு என்று பரவலாக பேசப்பட்டாலும், இதன் பின்னணியில் ஒரு மிகப்பெரிய சமூக காரணம் ஒளிந்துள்ளது.

குற்றங்களை வேரோடு அறுக்க அதிரடி முடிவு

உண்மையில், சுக்புரி கிராமப் பகுதியில் சமீபகாலமாக ஆன்லைன் பண மோசடி போன்ற சைபர் குற்றங்களும், பல சட்டவிரோத செயல்களும் பெருமளவில் அதிகரித்து வந்தன.

இந்த சமூக குற்றங்களுக்குப் பின்னால் ஸ்மார்ட்போன்களே முதன்மைக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இதனால், அந்த கிராமத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் தவறான வழிகளில் சென்று தங்களது வாழ்க்கையை இழந்து வந்துள்ளனர்.

இளைஞர்கள் தடம் மாறுவதை தடுக்க நடவடிக்கை

தங்களது கிராமத்து இளைஞர்கள் தடம் மாறுவதைத் தடுத்து, குற்றச்சாட்டுகள் இல்லாத ஒரு நிம்மதியான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்று கிராமத்தில் உள்ள பெரியவர்கள் முடிவு செய்தனர்.

இதற்காக அங்கு கிராம மக்கள் மத்தியில் ஒரு பெரிய விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டது.

கீபேட் போன்களுக்கு மாறும் மக்கள்

இந்த விழிப்புணர்வு இயக்கத்தின் இறுதி முடிவாக, சைபர் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட சுமார் 55 அதிநவீன ஸ்மார்ட்போன்களை ‘குற்றங்களின் அடையாளம்’ என்று அறிவித்து, மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மொத்தமாக அடித்து நொறுக்கி அழித்தனர்.

இனிமேல் தங்களது கிராமத்து இளைஞர்கள் தவறான பாதையில் செல்லாமல் நன்றாகப் படிக்க வேண்டும், நேர்மையான வழியில் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும், சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தை அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கில் கிராமத்தில் பெரியவர்களும், இளைஞர்களும் இணைந்து இம்முடிவை எடுத்துள்ளனர்.

குற்றமற்ற சமுதாயத்தை உருவாக்க முயற்சி

இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, இனிமேல் தங்களது கிராமத்தில் யாரும் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்த மாட்டார்கள் என்றும், அவசரத் தேவைகளுக்குச் சாதாரண கீபேட் போன்களை மட்டுமே பயன்படுத்தப் போவதாகவும் சுக்புரி கிராம மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

குற்றமற்ற சமுதாயத்தை உருவாக்க இந்த கிராம மக்கள் எடுத்த இந்த முயற்சி தற்போது இணையத்தில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.

====