இந்தியாவை வாட்டும் வெப்ப அலை
இந்தியாவில் கடுமையான வெப்ப அலை காரணமாக, ஒரே நாளில் இந்தியாவின் உச்சபட்ச மின்தேவை (Peak Power Demand) புதிய உச்சமாக 270 ஜிகாவாட்டை தாண்டியது. வெம்மை தாங்க முடியாமல் ஏர் கண்டிஷனர்கள் மற்றும் குளிர்சாதனப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்ததால், மின்தேவை அளவு புதிய சாதனையை படைத்துள்ளது.
எல்நினோ பாதிப்பால் அதிக வெப்பம்
எல்நினோ தாக்கம் காரணமாக இந்த ஆண்டு கோடையின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. வட மாநிலங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது.
காலை 6 மணிக்கே தொடங்கும் வெம்மையானது, படிப்படியாக அதிகரித்து, மாலை 6 மணியை தாண்டியும் நீடிக்கிறது.
இரவிலும் குறையாத புழுக்கம்
அதிக வெப்பத்தை வாங்கும் சுவர்கள், அவற்றை இரவு நேரங்களில் வெளியிடுவதால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக நகர்ப்புற பகுதிகளில் இரவிலும் 30 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு வெப்பமானது பதிவாகிறது.
சென்னையை வதைக்கும் வெப்பம்
தமிழகத்தை பொருத்தவரை மலை மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்தாலும், கடலோர மாவட்டங்களில் வெப்பம் குறையவில்லை. சென்னையில் இரண்டு தினங்களாக 108 டிகிரி பாரன்ஹீட் வரை வெயிலின் தாக்கம் பதிவாகி வருகிறது. இன்னும் நான்கு தினங்களுக்கு இதேநிலை நீடிக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
மின்பயன்பாடு அதிகரிப்பு
தகிக்கும் கோடை வெப்பம் காரணமாக நாட்டின் உச்ச மின்தேவையை பூர்த்தி செய்வதில் அனல் மின்சாரம் (Thermal) 62.8%, சூரிய சக்தி (Solar) 22%, காற்றாலை (Wind) 5%, மற்றும் நீர்மின்சாரம் (Hydro) 5.8% என்ற அளவில் பங்களித்து உள்ளன.
தேவையை பூர்த்தி செய்யும் அரசுகள்
மத்திய மின்சார ஆணையம் (Central Electricity Authority) இந்த கோடையில் நாட்டின் உச்சபட்ச மின் தேவை 271 ஜிகாவாட்டை எட்டும் என கணித்திருந்தது.
தொடர்ந்து 4 நாட்களாக மின்பயன்பாடு அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், அடுத்த 7 நாட்களில் மின்தேவை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு அதிகம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
=========