India alliance broken in Puducherry, DMK and Congress competing in 5 constituencies google
இந்தியா

Puducherry Elections : இண்டியா கூட்டணி உடைந்தது : 5 தொகுதிகளில் திமுகவுடன் மோதும் காங்கிரஸ் : CPI, CPM, VCK விரக்தி!

புதுச்சேரியில் இண்டியா கூட்டணி உடைந்து, முக்கிய கட்சிகளான திமுகவும், காங்கிரசும் 5 தொகுதிகளில் மல்லுக்கு நிற்கின்றன.

Kannan

புதுச்சேரி சட்டசபை தேர்தல்

அண்டை மாநிலமான புதுச்சேரியில் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

இங்கு முக்கிய கூட்டணியான ஆளும் என்டிஏ மற்றும் இண்டியா கூட்டணியில் தொகுதி பங்கீடு என்பது பெரும் பிரச்னையாக உருவெடுத்தது.

என்டிஏ கூட்டணி

என்டிஏ கூட்டணியில் ஆளும் என்ஆர் காங்கிரஸ் அதிக தொகுதிகளை எதிர்பார்க்க, அதை ஏற்க பாஜக முன்வரவில்லை. புதிதாக வந்திருக்கும் லட்சிய ஜனநாயக கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக விரும்பிய போதும், அதை ஏற்க முதல்வர் ரங்கசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் ஏற்பட்ட இழுபறி, தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு முடிவு வந்து என்ஆர் காங்கிரஸ் 16 தொகுதிகளில், பாஜக 10 இடங்கள், அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சி தலா 2 இடங்கள் என கூட்டணி இறுதியானது.

இண்டியா கூட்டணி

இதேபோன்று, இண்டியா கூட்டணியிலும் முட்டல், மோதல்களுக்கு பஞ்சம் என்பதே இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முதிலிலேயே 2 தொகுதிகளில் தனித்து போட்டி என்று முடிவு செய்தது.

யார் தலைமையில் ஆட்சி என்பதில் காங்கிரசும், திமுகவும் கடும் மோதலில் ஈடுபட்டன. இதனால் கூட்டணி உடையும் சூழல் உருவானது. இரண்டு கட்சிகளும் அனைத்து தொகுதிகளிலும் மனுதாக்கல் செய்து அதிரடி காட்டின. விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் மனுத்தாக்கல் செய்தன.

பங்கீடு முடிந்தும் ஓயாத பிரச்னை

பின்னர் ஒருவழியாக காங்கிரசுக்கு 16, திமுக மற்றும் அதனை தோழமை கட்சிகளுக்கு 14 என முடிவானது.

வேட்பு மனுக்களை திரும்ப பெற நேற்று கடைசி நாள் என்ற வகையில், தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை வாபஸ் பெற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

திமுக - காங்கிரஸ் நேரடி மோதல்

அதன் அடிப்படையில், காலாப்​பட்​டு, ராஜ்பவன், மங்​கலம், திரு​புவனை, காரைக்​கால் தெற்கு ஆகிய 5 தொகு​தி​களில் திமுக- காங்​கிரஸ் கட்​சிகள் நேரடி​யாக மோதுகின்​றன.

காங்கிரஸ் - விசிக மோதல்

அதே​போல் உழவர்​கரை, ஊசுடு, நெட்​டப்​பாக்​கம், ஏனாமில் விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சியை எதிர்த்து காங்​கிரஸ் போட்​டி​யிடு​கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் எதிர்ப்பு

இதற்கு மத்​தி​யில் தட்​டாஞ்​சாவடி, உழவர்​கரை ஆகிய இரு தொகு​தி​களில் மனு தாக்​கல் செய்​திருந்த இந்​திய கம்​யூனிஸ்ட் தட்​டாஞ்​சாவடி​யில் மட்​டும் வாபஸ் பெற்​றுள்​ளது. உழவர்​கரை​யில் போட்​டி​யிடு​கிறது.

இதுபற்றி இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச்​செயலர் சலீம் கூறுகை​யில், "இத்​தேர்​தலில் திமுக, காங்​கிரஸ் கட்​சிகளுக்கு புதுச்​சேரி​யில் எங்​களின் ஆதரவு இல்​லை.

விசிக, மார்க்​சிஸ்ட், மதி​முக கட்​சிகள் போட்​டி​யிடும் தொகு​தி​களில் ஆதரவு அளிப்​போம். நல்ல சுயேச்​சைகளுக்​கும் ஆதரவு தரு​வோம். வலு​வான இண்​டியா கூட்​ட​ணியை காங்​கிரஸ் உடைத்து விட்​டது’’ என்​றார்.

மார்க்சிஸ்ட் தனித்து போட்டி

கூட்​ட​ணிக் குழப்​பத்​தால், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் லாஸ்​பேட்​டை, திரு​புவனை ஆகிய இரு தொகு​தி​களில் தனித்​துப் போட்​டி​யிடு​கிறது.

இதுதொடர்​பாக மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் புதுச்​சேரி மாநில செய​லா​ளர் ராமசந்​திரன் கூறுகை​யில், “கூட்​ட​ணிக் கட்​சிகளை இணைத்​துச் செல்ல திமுக - காங்​கிரஸ் இரண்​டுமே தவறி விட்​டன எனக் குற்றம்சாட்டினார்.

என்டிஏவுக்கு வெற்றி வாய்ப்பு!

புதுச்சேரியில் இண்டியா கூட்டணி நாலாபுறமும் பிரிந்து கிடப்பதால், அங்கு என்டிஏ கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

கருத்துக் கணிப்புகளும் என்ஆர் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று சொல்வதால், இண்டியா கூட்டணி தொண்டர்கள் சோர்வடைந்து காணப்படுகின்றனர்.

==========