அதிபர் டொனால்டு டிரம்ப்
Piyush Goyal on India-US Trade Deal Agreement : டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் பல அதிரடி வரி விதிப்புகளை இந்தியா, சீனா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு விதித்திருந்தார்.
அதன்படி டிரம்ப் இந்திய பொருட்களுக்கான 10 சதவீதம் வரியை 25 சதவீதமாகவும் பின்னர் 50 சதவீதமாகவும் உயர்த்தியது உலக நாடுகளிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்திய ஏற்றுமதி பாதிப்பு
ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணையை வாங்குவதால் தான் அந்த நிதியை வைத்து ரஷ்யா போர்த் தளவாடங்களை வாங்குவதாக கூறி டிரம்ப் விதித்த இந்த அதிரடி வரி உயர்வால் இந்தியாவின் ஏற்றுமதி சந்தையானது கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்திய வரி 18% ஆக குறைப்பு
இந்தநிலையில் தான் தற்போது பிரதமர் மோடி,அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தையின் அடுத்தகட்ட நகர்வாக தற்போது இந்தியாவிற்கான இறக்குமதி வரியானது 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்
இந்தநிலையில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரியான பியூஸ் கோயல் ஒப்பந்தம் தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
ஒரு வாரத்தில் வர்த்தக ஒப்பந்தம்
இருநாடுகளுக்கு இடையிலான முதற்கட்ட நகர்வு குறித்த அறிக்கையில் அடுத்த 4 அல்லது 5 நாட்களுக்குள் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார்.
கையெழுத்தான பிறகு முன்னர் இருந்த 25 சதவீத வரியை 18 சதவீதமாக குறைப்பது தொடர்பான உத்தரவை அமெரிக்கா பிறப்பிக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான முறையான வரைவு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஒப்பந்தத்தில் முதலீட்டு உறுதிமொழி எதுவும் இல்லை.
எனினும் இந்த பணிகள் முழுவதுமாக நிறைவடைய ஒன்றரை மாதங்கள் வரை ஆகலாம். எனவே மார்ச் மாதத்தில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.
=======