1973-74 பட்ஜெட்
இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து அதாவது 1947ம் ஆண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், 1973-74ம் ஆண்டுக்கான நிதி நிலையை தாக்கல் செய்தவர், அப்போது நிதியமைச்சராக இருந்த ஒய்.பி. சவான்.
கருப்பு பட்ஜெட்
இந்த பட்ஜெட் தான் 'கருப்பு பட்ஜெட்' என்று அழைக்கப்படுகிறது. சவான் தாக்கல் செய்த பட்ஜெட்டில் திட்டமிடப்பட்ட செலவினங்களை விட வருமானம் மிகக் குறைவாக இருந்தது. இதனால் சுமார் 550 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டது. 1970-களில் 550 கோடி ரூபாய் என்பது தற்போதைய மதிப்பில் பல லட்சம் கோடிகளுக்குச் சமம்.
பெரிய பற்றாக்குறை
இந்தப் பெரிய பற்றாக்குறையை சீர் செய்ய வழியில்லாததால் இது 'கருப்பு பட்ஜெட்' என வர்ணிக்கப்பட்டது. அந்தக் காலத்தில் 550 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட பல காரணங்கள் இருந்தன.
இந்தியா - பாகிஸ்தான் போர்
அதில் முக்கியமான ஒன்று 1971ம் ஆண்டு நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போர். வங்கதேச விடுதலைக்காக இந்தியா நடத்திய போரினால் நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளானது. ராணுவச் செலவுகள் உச்சத்தில் இருந்தன.
உச்சத்தில் ராணுவச் செலவுகள்
இதுவே வருவாயை விட செலவுகள் பல மடங்கு அதிகரிக்க காரணமாக அமைந்தது. போரின் காரணமாக வங்கதேசத்திலிருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இந்தியாவுக்குள் வந்தனர். அவர்களுக்கு உணவும் தங்குமிடமும் வழங்க அரசு பெரும் தொகையைச் செலவிட வேண்டியிருந்தது.
விவசாய உற்பத்தி முடங்கியது
1972 மற்றும் 1973ல் பருவமழை பொய்த்ததால் விவசாய உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் உணவுப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டது. கருப்பு பட்ஜெட்டில் சில முக்கிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
அரசின் கட்டுப்பாட்டில் நிலக்கரி சுரங்கங்கள்
1973-75 காலகட்டத்தில் நிலக்கரிச் சுரங்கங்களை அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இது நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையாக பார்க்கப்பட்டது.
பொது காப்பீடு - தேசிய மயம்
பொது காப்பீட்டு வணிகம் தேசியமயமாக்கப்பட்டது. இதற்கான நிதி மேலாண்மை மற்றும் இழப்பீட்டுத் தொகைகள் இந்த 'கருப்பு பட்ஜெட்' காலகட்டத்தில் தான் கையாளப்பட்டன. கடுமையான நிதி நெருக்கடியிலும் நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பொதுத்துறை நிறுவனங்களுக்கு சுமார் 125 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
பாதுகாப்பு துறைக்கு அதிக செலவு
1971 போருக்குப் பிறகு பாதுகாப்புத் துறைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சுமார் 1,600 கோடி ரூபாய் அந்தத் துறைக்கு மட்டும் ஒதுக்கப்பட்டது. மொத்த பற்றாக்குறை 550 கோடி என்னும்போது, பாதுகாப்புக்காகச் செய்யப்பட்ட இந்தச் செலவு நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியது.
வருமான வரி 97.75%
வருமான வரி விகிதம் கற்பனை செய்ய முடியாத உயரத்தில் இருந்தது. ஒரு கட்டத்தில் அதிகபட்ச வருமானம் ஈட்டுபவர்களுக்கு 97.75% வரி விதிக்கப்பட்டது. அதாவது, 100 ரூபாய் சம்பாதித்தால் 97 ரூபாய் 75 காசுகளை வரியாகச் செலுத்த வேண்டும். இது வரி ஏய்ப்புக்கும், கறுப்பு பணம் உருவாவதற்கும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது
நிதியமைச்சர் சவான் தனது உரையின் போது, "நாட்டின் பொருளாதாரச் சூழல் மிகவும் சவாலாக இருக்கிறது, இந்தப் பற்றாக்குறையைத் தவிர்க்க முடியாது" என்று வெளிப்படையாகக் கூறிவிட்டுத்தான் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். எனவே தான் அந்த பட்ஜெட் கருப்பு பட்ஜெட் என்று அழைக்கப்பட்டது.
===============