தாமதமாக தொடங்கிய பருவமழை
கர்நாடகாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மிகவும் தாமதமாக தொடங்கியது. இதனால் காவிரியின் குறுக்கேயுள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகள் வறண்டு காணப்பட்டன.
கர்நாடகாவில் பலத்த மழை
இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை இரவு முதல் கர்நாடகாவில் ஷிமோகா, ஹாசன், சிக்கமகளூரு, உடுப்பி, உத்தர கன்னடா உள்ளிட்ட மலநாடு பகுதியை சேர்ந்த மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
இதனால் கிருஷ்ணா, துங்க பத்ரா, நேத்ராவதி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
குடகு மாவட்டத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலக் காவிரி, பாக மண்டலா, மடிகேரி உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு
கடந்த 24 மணி நேரத்தில் மடிகேரி வட்டத்தில் உள்ள பெங்கூரு கிராமத்தில் 211.5 மி.மீ மழை பதிவானது. இரவும் பகலும் விடாமல் கொட்டி தீர்த்த கனமழையால் காவிரி ஆற்றிலும் அதன் துணை நதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
இதனால் கிருஷ்ண ராஜசாகர், ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
தமிழகத்துக்கு விரைவி்ல் காவிரி நீர்
இது தமிழகத்திற்கு மிகவும் நல்ல செய்தி. கர்நாடக அணைகள் நிரம்பினால், காவிரில் தண்ணீர் திறந்து விடப்படும்.
இதனால், தமிழக டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியும், எனவே, விவசாயிகள், காவிரி நீரை நம்பி தவம் கிடக்கின்றனர்.
=========================