IRCTC Online Ticket Booking :
ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான அதிகாரப்பூர்வ தளமாக இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான பயணிகள் பயன்பெற்று வருகிறார்கள்.
அதிகரித்த ஆன்லைன் முன்பதிவு
பண்டிகை காலத்தை முன்னிட்டு நிறைய பேர் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை புக் செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதன்காரணமாக, செப்டம்பர் 7 அன்று 20 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன.
IRCTC சாதனை
IRCTC தனது வரலாற்றில் மிக அதிகமான ஒற்றை நாள் முன்பதிவைப் பதிவு செய்து இருக்கிறது. செப்டம்பர் 7ம் தேதி மட்டும் IRCTC மூலம் மொத்தம் 20,06,353 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன. இதன் மூலம், தினசரி எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியது இதுவே முதல் முறையாகும்.
அடுத்த நாளும் தேவை அதிகமாகவே இருந்தது, செப்டம்பர் 8 அன்று 19,50,699 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன.
முந்தைய சாதனை முறியடிப்பு
கடந்த ஆண்டு பண்டிகைக் காலத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக முன்பதிவு செய்யப்பட்ட 18,40,203 டிக்கெட்டுகளை விட ஆறு சதவீதம் அதிகமாகும்.
89% ஆன்லைனில் முன்பதிவு
முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளில் சுமார் 89 சதவீதம் தற்போது ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படுகின்றன என்று ஐ.ஆர்.சி.டி.சி தெரிவித்துள்ளது.
கையாளும் சர்வர்கள் அதிகரிப்பு
அதிகரித்து வரும் முன்பதிவு அளவைக் கையாள, புதிய சர்வர்கள் நிறுவப்பட்டுள்ளதால், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு அமைப்பின் திறன் கிட்டத்தட்ட இருமடங்காகியுள்ளது.
ஐஆர்சிடிசி, ஜூலை 15, 2026 அன்று ஒரு புதிய இணையதளத்தையும் பயனர் இடைமுகத்தையும் அறிமுகப்படுத்தியது. இது, பயணிகள் வெவ்வேறு வகுப்புகளில் உள்ள இருக்கைகளின் இருப்பை ஒரே திரையில் காண அனுமதிக்கிறது.
மோசடிகளை தவிர்க்க தீவிரம்
மோசடி முன்பதிவு நடவடிக்கைகளுக்கு எதிரான தனது நடவடிக்கைகளையும் ரயில்வே நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
டிக்கெட் முன்பதிவு தளம், காலை 8 மணி முதல் 8:10 மணி வரையிலான முன்பதிவு சாளரம் திறந்த முதல் 10 நிமிடங்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முகவர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்காத முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது.
மேலும், முன்பதிவு சாளரம் திறக்கும்போது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயனர்களுக்கு ஆதார் சரிபார்ப்பும் கட்டாயமாக்கி இருக்கிறது.
சாதனை அளவிலான முன்பதிவுகள் இருந்தபோதிலும், புதிய ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு அமைப்பில் பெரிய கோளாறோ அல்லது செயலிழப்போ ஏற்படவில்லை என்று ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.
===============