FIR பதிவு செய்யக் கோரி போலீஸ் நிலையம் சென்ற ராகுல் காந்தி :
ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின்போது போலீசார் நடத்தியதாகக் கூறப்படும் பெல்லட் கன் தாக்குதல் விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக காயமடைந்த மாணவர் சாஹில் லோச்சவுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் உள்ள பார்லிமென்ட் ஸ்ட்ரீட் காவல் நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) சென்றார். அங்கு சம்பவம் தொடர்பாக FIR பதிவு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஜூலை 20-ம் தேதி நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் :
கடந்த ஜூலை 20-ம் தேதி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின்போது போலீசார் பெல்லட் கன் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதில் சாஹில் லோச்சவ் உள்ளிட்ட சிலர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாஹிலின் உடலில் ஏராளமான பெல்லட் குண்டுகள் பாய்ந்ததாகவும், அவரது கண் பார்வை பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
புகார் அளித்தும் FIR பதிவு செய்யவில்லை என குற்றச்சாட்டு:
சாஹில் லோச்சவ் தனது வழக்கறிஞர்களுடன் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி டெல்லி போலீசாரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததாக காங்கிரஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
ஆனால், புகாருக்கான விசாரணை அதிகாரியின் விவரங்கள் அல்லது பெறப்பட்டதற்கான ஒப்புதல் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்ட ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட மாணவருடன் காவல் நிலையத்துக்குச் சென்றார்.
போலீஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட ராகுல்:
பார்லிமென்ட் ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில் துணை காவல் ஆணையரை (DCP) சந்தித்த ராகுல் காந்தி, ஜந்தர் மந்தர் போராட்டத்தின்போது பெல்லட் கன் பயன்படுத்தப்பட்டது தொடர்பான விசாரணை நிலவரம் குறித்து விளக்கம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, பெல்லட் கன் பயன்படுத்த உத்தரவிட்டது யார், சம்பவம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட கேள்விகளை அவர் முன்வைத்ததாக கூறப்படுகிறது.
மாணவர்களுக்கு நீதி வேண்டும்” – காங்கிரஸ் வலியுறுத்தல்:
இந்த விவகாரத்தில் போலீசாரின் நடவடிக்கை குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், மாணவர் அளித்த புகாரின் அடிப்படையில் சட்டப்படி FIR பதிவு செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
அமைதியான போராட்டத்தில் போலீசார் அதிகப்படியான வலிமையை பயன்படுத்தியிருந்தால், அதற்கு பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என அக்கட்சி தெரிவித்துள்ளது.
டெல்லியில் மீண்டும் அரசியல் பரபரப்பு:
ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பெல்லட் கன் பயன்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு மற்றும் அதுதொடர்பாக FIR பதிவு செய்வதில் ஏற்பட்டுள்ள சர்ச்சை தற்போது அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ராகுல் காந்தியே நேரடியாக காவல் நிலையம் சென்று தர்ணாவில் ஈடுபட்டிருப்பது, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மத்திய அரசு மற்றும் டெல்லி போலீசாருக்கு எதிராக தனது அழுத்தத்தை அதிகரித்துள்ளதை வெளிப்படுத்துகிறது.