PM Modi held discussions with Chief Ministers regarding employment, skill development at NITI Aayog meeting google
இந்தியா

”பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்” : வேலைவாய்ப்பு, மேம்பாட்டு திட்டங்கள் முதலமைச்சர்களுடன் ஆலோசனை...!

டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி விரிவாக விவாதித்தார்.

Kannan

11வது நிதி ஆயோக் கூட்டம்

நிதி ஆயோக் கவுன்சிலின் 11வது கூட்டம் டெல்லி ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள கலாசார மையத்தில் இன்று தொடங்கியது. மதியம் 1 மணி வரையில் ஒரு கட்டமாகவும், பிற்பகல் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை என இரு கட்டங்களாக கூட்டம் நடைபெற்றது.

பிரதமர் மோடி தலைமை வகித்தார்

இந்த கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பியூஷ் கோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல்வர் விஜய் பங்கேற்பு

இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் கலந்து கொண்டார். மேலும், பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர்.

மேலும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள், நிதி ஆயோக்கின் துணைத் தலைவர், முழுநேர உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

முக்கிய விவாதங்கள்

வேளாண் துறையில் தன்னிறைவை எட்டுதல், தேசியக் கல்வி கொள்கை, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியின் அமலாக்கம், நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

புதிய இந்தியா - முக்கிய ஆலோசனை

முக்கியமாக புதிய இந்தியா என்ற திட்டத்தை அடிப்படையாக கொண்டு இந்த நிதி ஆயோக் கூட்டமானது நடைபெற்றது. குறிப்பாக அடுத்த 15 ஆண்டுகளுக்கான நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி திட்டம், பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நாடு முழுவதும் சிறு குறு தொழிலை எப்படி ஊக்கப்படுத்துவது...

பணவீக்கத்தை சரி செய்து ஜி.டி.பியை அதிகப்படுத்துவது போன்ற ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஒரே நாடு ஒரே தேர்தல் ஆலோசனை

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை எப்படி நடத்துவது, நாரி சக்தி குறித்தும் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில முதல்வர்களுடன் முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டது.

வளர்ச்சி திட்டங்கள்

மாநிலங்களின் தொலைநோக்கு பார்வை திட்டங்களை, தேசிய வளர்ச்சியோடு இணைப்பது, தொழில்சார் உள்கட்டமைப்பு மேம்பாடு, மனித மூலதனம் மற்றும் திறன்கள், அடித்தள கல்வி மற்றும் எதிர்காலத்திற்கு தயாரான திறன் மேம்பாடு, பரவலாக்கப்பட்ட வளர்ச்சி குறித்து முதல்வர்களுடன் பிரதமர் விவாதித்தார்.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி

சமத்துவம் மற்றும் கண்ணியம், அனைத்து சமூக-பொருளாதாரப் பிரிவினருக்கும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்தல், தொழில்சார் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.

=============