10 ஆண்டுகளை நிறைவு செய்த யுபிஐ :
இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை கட்டமைப்பில் முக்கிய பங்காற்றி வரும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) தனது 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பதிவில் யுபிஐ-க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
யுபிஐ அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் இந்தியாவில் பணப்பரிவர்த்தனை செய்வது மிகவும் எளிமையாகவும் வேகமாகவும் மாறியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்
ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்பட வைக்கிறது:
யுபிஐ-ன் வளர்ச்சியை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, அதன் பிரம்மாண்டமும், பயனும் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்பட வைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் யுபிஐ மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கியமான ஒரு பகுதியாக மாறியுள்ளதாகவும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தொடர்பான தங்களது அனுபவங்களை மக்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோடிக்கணக்கான பரிவர்த்தனைகள்:
2016ஆம் ஆண்டு யுபிஐ அறிமுகப்படுத்தப்பட்டபோது அதன் பயன்பாடு மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் ஸ்மார்ட்போன் மற்றும் இணையப் பயன்பாடு அதிகரித்ததுடன், யுபிஐ பரிவர்த்தனைகளும் தொடர்ந்து உயர்ந்தன.
2025-26 நிதியாண்டில் மட்டும் யுபிஐ மூலம் சுமார் 24,162 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.
2016-17ஆம் ஆண்டில் சுமார் 1.78 கோடி பரிவர்த்தனைகள் மட்டுமே பதிவான நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை பல ஆயிரம் மடங்கு உயர்ந்துள்ளது.
உலகளவில் இந்தியாவின் டிஜிட்டல் முன்னேற்றம் :
யுபிஐ இந்தியாவுக்குள் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் கவனம் பெற்றுள்ளது.
பல்வேறு நாடுகளில் இந்தியாவின் யுபிஐ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வசதிகள் விரிவடைந்து வருகின்றன.
கடைகள், உணவகங்கள், போக்குவரத்து சேவைகள், ஆன்லைன் வணிகம் என பல்வேறு துறைகளிலும் தற்போது QR குறியீட்டை ஸ்கேன் செய்து சில நொடிகளில் பணம் செலுத்தும் வசதி பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் இடம்பெற்றுள்ளது.