நீட் வினாத்தாள் கசிவு
நீட் வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.
மாணவர்கள் போராட்டம்
நீட் வினாத்தாள் கசிவை கண்டித்தும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரியும், கரப்பான் பூச்சி கட்சியினர், மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்டத் திருத்த மசோதா
டெல்லியில் தொடங்கிய போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற, மத்திய அரசு, வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்தது.
இது தொடர்பாக 3 முறை வீடியோ வெளியிட்டு, உண்மை நிலையை பிரதமர் மோடி விளக்கினார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
மழைக்கால கூட்டத் தொடரில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாட்டின் தேர்வு முறையில் முக்கியச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும், வினாத்தாள்களை கசிய விடுபவர்களுக்கும் எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த மசோதா வழிவகுகும்.
பிரதமர் மோடி செல்ஃபி வீடியோ
மசோதா நிறைவேறியதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வினாத்திள் கசிவு - பெரிய தலைவலி
அதில் அவர் கூறியிருப்பதாவது: “கடந்த பல தசாப்தங்களாக மத்திய மற்றும் மாநில அரசுகள் வினாத்தாள் கசிவு என்ற மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு வந்தன. இதனால் கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டது.
மத்திய அரசு உறுதியான நடவடிக்கை
இந்தச் சூழலை மாற்றவே நமது அரசு தேர்வு முறையில் அதிவேக நடவடிக்கைகள், தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் மாநிலங்களின் ஆலோசனைகளை உள்ளடக்கிய தொடர் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.
மாஃபியாக்கள் தப்பவே முடியாது
மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் வினாத்தாள் கசிவு மாஃபியாக்கள் நிச்சயமாகத் தப்ப முடியாது. அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சீர்திருத்தங்கள் மிகவும் அவசியம்
நாட்டின் கல்வி அமைப்பில் மத்திய மற்றும் மாநில அளவிலான இத்தகைய சீர்திருத்தங்கள் மிகவும் அவசியமானவை" என்று அந்த வீடியோவில் பிரதமர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி வரை அபராதம்
மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்தின் மூலம், வினாத்தாள் கசிவில் ஈடுபடும் நபர்களுக்குக் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.50 லட்சம் வரை அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், அமைப்பாகச் செயல்படும் கும்பல்களுக்கு ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும். இதற்காக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு 2 மாதங்களுக்குள் விசாரணை நிறைவு செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
===============