பிரதான் மந்திரி கிசான் திட்டம்
மத்திய பாஜக ஆட்சியில் விவசாயிகளின் நலனை காக்க கொண்டு வரப்பட்ட திட்டம் தான் பிரதான் மந்திரி கிசான் திட்டம். 2019ம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் தலா 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
ஆண்டுக்கு 6,000, மூன்று தவணைகள்
நான்கு மாதங்களுக்கு ஒருமுறை 2 ஆயிரம் ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்தஃ திட்டத்தை மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து இருக்கிறது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :
* பிரதமரின் விவசாயிகள் கவுரவ நிதி திட்டத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு (2026-27 முதல் 2030-31 வரை) தொடர, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
* அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இத்திட்டத்திற்கு மொத்தம் ரூ.3.15 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* விவசாயிகளின் வளமே நாட்டின் வளத்துக்கு அடிப்படை என்ற அரசின் உறுதியான அர்ப்பணிப்பை இந்த நடவடிக்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
* தகுதியுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு நேரடிப் பணப் பரிமாற்ற முறையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளிப்படைத் தன்மையுடன் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
* ஆதார் சரிபார்ப்பு, டிஜிட்டல் நடைமுறை மூலம் வெளிப்படைத்தன்மைக்கு இந்தத் திட்டம் மிகச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
* இதுவரை 23 தவணைகள் மூலம் ரூ.4.47 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை விவசாயிகளின் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது.
* 23வது தவணையில் மட்டும் ரூ.18,984 கோடிக்கும் அதிகமான தொகை விடுவிக்கப்பட்டு 9.49 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன் பெற்றனர்
* கோவிட் பெருந்தொற்று காலத்தில் விவசாயிகளுக்கு ரூ.1.71 லட்சம் கோடிக்கும் அதிகமாக நிதி உதவி வழங்கப்பட்டது.
* பெண் விவசாயிகளுக்கு ரூ.1.06 லட்சம் கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளதுடன், பயனாளிகளில் நான்கு பேரில் ஒருவர் பெண் விவசாயியாக உள்ளார்.
* நிதி ஆயோக்கின் மதிப்பீட்டின்படி, 92 சதவீதத்துக்கும் அதிகமான பயனாளிகள் இந்தத் தொகையைக் வேளாண் பணிகளுக்கு பயன்படுத்தியுள்ளனர்.
* 85 சதவீத பயனாளிகள் தங்களின் விவசாய வருமானம் அதிகரித்துள்ளதாகவும் கடன் சுமை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
* 2020-21 முதல் 2025-26 வரையிலான காலத்தில் சாகுபடி பரப்பு 9.65 சதவீதமும், வேளாண் உற்பத்தித் திறன் 10.53 சதவீதமும், மொத்த உணவு தானிய உற்பத்தி 21.18 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
* டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் சிறந்த உதாரணமாகத் திகழும் பிரதமரின் கிசான் திட்டம், விவசாயிகளின் முதலீட்டுத் திறனை அதிகரித்து, தற்சார்பு இந்தியா, வளர்ச்சியடைந்த இந்தியா இலக்கை அடைவதில் முக்கியத் தூணாக செயல்பட்டு வருகிறது.
=========================