Prashant Kishorvictory in Bankipur Assembly by-election demolishing BJP stronghold stood for 30 years AI generated
இந்தியா

”30 ஆண்டுகள் BJP கோட்டை 30 நாட்களில் தகர்ப்பு” : பங்கிபூர் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி, வாக்கு வித்தியாசம் 19,324!

பிகாரின் பங்கிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பிரசாந்த் கிஷோர், 30 ஆண்டுகால பாஜக கோட்டையை தகர்த்து இருக்கிறார்.

Kannan

தேர்தல் வியூக வகுப்பாளர்

பல்வேறு தேர்தல்களில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூக அமைப்பாளராக பணியாற்றியவர் பிரசாந்த் கிஷோர். பாஜக, திமுக, திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு தேர்தல் வெற்றி வியூகங்களை வகுத்து கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர்.

ஜன் சுராஜ் கட்சி

பிகார் மாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த 2024ல் ஜன் சுராஜ் என்ற கட்சியை நிறுவினார். இந்நிலையில், பங்கிபூர் தொகுதியின் இடைத்தேர்தலில் அவர் போட்டியிட்டார். அவர் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை.

2025 சட்டமன்ற தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி போட்டியிட்டாலும், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. வெறும் 3.34 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. பிரசாந்த் கிஷோர் போட்டியிடாதது, கட்சியின் தேர்தல் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்பட்டது.

பாஜகவின் கோட்டை - பங்கிபூர்

பங்கிபூர் சட்டமன்ற தொகுதியில் 2010 முதல் 2025 பேரவை தேர்தல் வரை, தற்போது பாஜக தேசியத் தலைவரான நிதின் நபின், தொடர்ச்சியாக 5 முறை வெற்றி பெற்று இருந்தார்.

பங்கிபூர் இடைத்தேர்தல்

பாஜகவின் கோட்டையாகத் திகழ்ந்து வந்தது பங்கிபூர் தொகுதி. பாஜகவின் தலைவரான பிறகு, நிதின் நபின், ராஜ்யசபா எம்பியானார். எனவே, எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்ய, அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

பிரசாந்த் கிஷோர் போட்டி

இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்தார். எனவே, பாஜக மற்றும் ஜன் சுராஜ் கட்சி இடையிலான போட்டி பலமானது.

பிரசாந்த் கிஷோர் வெற்றி

தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பங்கிபூர் தொகுதியில் 64,151 வாக்குகள் பெற்று பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் நீரஜ் குமார் சின்ஹா, 44,827 வாக்குகள் பெற்றார். இருவருக்கும் இடையிலான வித்தியாசம் 19,324 வாக்குகள்.

மூன்று மாதங்களில் மாற்றங்கள் நிச்சயம்

“அடுத்த மூன்று மாதங்களில் பங்கிபூர் தொகுதியில் ஏற்பாடும் மாற்றத்தை நீங்கள் காணலாம். அதற்கு எனக்கு மூன்று மாத காலம் அவகாசம் தேவை. பங்கிபூர் தொகுதி மக்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த பிகார் மக்களும் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.

நான் இங்கு அசாதாரணமான சாதனை எதையும் செய்யவில்லை. இருப்பினும் 30 நாட்களில் பாஜகவில் 30 ஆண்டுகால ஆதிக்கத்தை தகர்த்துள்ளேன்.

பிகார் மக்களுக்கு நல்ல தலைவர் தேவை

பாஜக தலைமைக்கு பிகார் மக்கள் ஒரு செய்தியை இந்த தேர்தலின் முடிவு மூலம் தெரிவித்துள்ளனர். நல்ல மனிதர் ஒருவரை பிகார் முதல்வராக அரியணை ஏற்ற தாங்கள் தயார் என தெரிவித்துள்ளனர்.

குற்றப் பின்னணி கொண்டவர் பிகாரை வழிநடத்த மக்கள் விரும்பவில்லை. எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி” என்று வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடன் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

=================