நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம்
President Droupadi Murmu Speech at Parliament Budget Session 2026 : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றினார். இதற்காக நாடாளுமன்றத்திற்கு வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
விரைவாக முன்னேறும் இந்தியா
பின்னர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றினார். ‘‘நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியாவுக்கு விரைவான முன்னேற்றத்தை அளித்த மறக்க முடியாத ஆண்டாக கடந்த ஆண்டு இருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்து
வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த பாடலை எழுதிய பக்கிம் சந்திர சாட்டர்ஜிக்கு, நாட்டுமக்கள் மரியாதை செலுத்துகின்றனர்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு விவாதம் நடத்தப்பட்டது. அதற்காக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒரே நாடு உன்னத நாடு
ஸ்ரீ குரு தேஜ் பகதூரின் 350-வது தியாக தினத்தை அரசு நினைவுகூர்ந்து விழா எடுத்தது. இதேபோல், பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாளில் நாடு அவருக்கு அஞ்சலி செலுத்தியது.
பழங்குடி சமூகத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நாடு நினைவு கூர்ந்தது.
சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் தொடர்பான நிகழ்வுகள், ஒரே நாடு உன்னத நாடு என்ற உணர்வை மேலும் வலுப்படுத்தியது.
தலைவர்களை கொண்டாடிய அரசு
பாரத ரத்னா பூபன் ஹசாரிகாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நாட்டை எவ்வாறு இசையாலும் ஒற்றுமை உணர்வாலும் நிரப்பின என்பதை முழு நாடும் கண்டது.
நாடு தனது முன்னோர்களை நினைவுகூரும்போது, புதிய தலைமுறைக்கு உத்வேகம் கிடைக்கிறது.
இது வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கிய நமது பயணத்தை மேலும் வேகப்படுத்துகிறது.
25 ஆண்டுகளில் இந்தியாவின் வெற்றி
இந்த நூற்றாண்டின் முதல் 25 ஆண்டுகள், இந்தியாவுக்கு பல வெற்றிகள், பெருமைக்குரிய சாதனைகள், அசாதாரண அனுபவங்கள் ஆகியவற்றால் நிறைந்ததாக இருந்துள்ளது.
கடந்த 10-11 ஆண்டுகளில், இந்தியா ஒவ்வொரு துறையிலும் தனது அடித்தளத்தை வலுப்படுத்தி உள்ளது. நாட்டில் சமூக நீதி நிலைநாட்டப்பட அரசு உறுதிபூண்டுள்ளது.
95 கோடி இந்தியர்களுக்கு பலன்கள்
மத்திய அரசின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் பலன்கள் இப்போது ஏறத்தாழ 95 கோடி இந்திய குடிமக்களுக்குக் கிடைக்கின்றன. மத்திய அரசு பல்வேறு சாதனைகளைப் புரிந்து வருகிறது.
இந்தியாவில் தற்போது 150 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன’’ என ஜனாதிபதி திரௌபதி முர்மு தெரிவித்தார்.
ஜனாதிபதி உரை - முக்கிய அம்சங்கள் :
* உலகளாவில் நெல் உற்பத்தியில் இந்தியா முதலிடம், கடந்த ஆண்டு 350 டன் உணவு உற்பத்தி
* 10 ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு 4 கோடி வீடுகள் கட்டித் தரப்பட்டன.
* உஜ்வாலா திட்டத்தின் கீழ் 2 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகள்
* ஆயுஷ்மான் திட்டம் மூலம் மக்களுக்கு வீடுகளுக்கு அருகே மருத்துவமனைகள்.
* மின்சார வாகன உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்து வருகிறது.
* உலகில் 3வது அளவில் மெட்ரோ இணைப்பு கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.
* இந்தியாவில் டிஜிட்டல், AI-ல் முதலீடு அதிகரித்துள்ளது.
* பின் தங்கிய மக்களின் முன்னேற்றமே அரசின் இலக்காக உள்ளது.
* கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.
* ஜல்ஜீவன் திட்டம் மூலம் 12.5 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு
* ஏழைகளுக்காக தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் இதுவரை, மருத்துவமனைகளில் 11 கோடிக்கும் மேற்பட்ட இலவச சிகிச்சைகள்.
நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில், குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், இரு அவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பிப்.1ல் மத்திய பட்ஜெட்
பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட்டை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். சுதந்திர இந்திய வரலாற்றில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
==================================