ஆந்திர அரசு அதிரடி
Population Management Policy Scheme 2026 in Andhra Pradesh : ஆந்திராவில் முதல்வர் என். சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு, மாநிலத்தின் எதிர்காலத்தை செயல்படுத்த இருக்கும் மக்கள்தொகை மாற்றக் கொள்கை நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. மக்கள்தொகை வீழ்ச்சியை தடுக்க ஆந்திர அரசு இந்த முடிவை எடுத்து உள்ளது.
குறைந்து வரும் பிறப்பு விகிதம்
ஆந்திராவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் மற்றும் அதிகரித்து வரும் முதியோர் மக்கள்தொகை சவால்களைச் சமாளிக்க, புரட்சிகரமான மக்கள்தொகை மேலாண்மைக் கொள்கையை அறிவித்துள்ளார் சந்திரபாபு நாயுடு.
அதிக குழந்தைகள் பெற்றால் சலுகை
அதன்படி, அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தம்பதிகளுக்குப் பல்வேறு நிதியுதவிகள் மற்றும் சலுகைகளை அரசு வாரி வழங்குகிறது.
கருவுறுதல் விகிதம் குறைவு
ஆந்திராவின் கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate - TFR) தற்போது 1.5 ஆக குறைந்துள்ளது. இது மக்கள்தொகையை நிலையாக வைத்திருக்கத் தேவையான 2.1 என்ற அளவை விட மிகவும் குறைவாகும்.
இளைஞர்கள் எண்ணிக்கை - அதிகரிக்க முயற்சி
இதன் காரணமாக 2047ம் ஆண்டிற்குள் ஆந்திரா ஒரு "வயதான மாநிலமாக" மாறும் அபாயம் எழுந்துள்ளது. எனவே, இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும் நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தம்பதிகளுக்கு சலுகைகள்
இரண்டாவது அல்லது மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிகளுக்குத் தலா ரூ. 25,000 ஒருமுறை நிதியுதவியாக வழங்கப்படும்.
3வது குழந்தைக்கு மாதம் ரூ.1,000
மூன்றாவது குழந்தையின் ஊட்டச்சத்து மற்றும் பராமரிப்புச் செலவுகளுக்காக, அக்குழந்தைக்கு 5 வயது ஆகும் வரை மாதம் ரூ. 1,000 வீதம் மொத்தம் 60 மாதங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
இலவச கல்வி
மூன்றாவது குழந்தைக்கு 18 வயது வரை (பள்ளிக் கல்வி முடியும் வரை) அரசுப் பள்ளிகள் மற்றும் உண்டு உறைவிடப் பள்ளிகளில் முழுமையான இலவசக் கல்வி உறுதி செய்யப்படும்.
அரசு ஊழியர்களுக்கும் சலுகைகள்
அரசு ஊழியர்களுக்கு கூடுதல் சலுகைகளை முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்
* தாய்மார்களுக்கு 12 மாதங்கள் (ஒரு வருடம்) சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு.
* தந்தைமார்களுக்கு 2 மாதங்கள் தந்தைவழி விடுப்பு.
* கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் ஊழியர்களுக்கு பதவி உயர்வுகளில் முன்னுரிமை
சுகாதார சேவைகள்
கருவுறுதல் குறைபாடு உள்ள தம்பதிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் மானிய விலையில் நவீன சிகிச்சை அளிக்கப்படும்.
இதற்கு முன்னால் "இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தேர்தலில் போட்டியிட முடியாது" என்ற விதியை ரத்து செய்ததோடு, தற்போது "அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் மட்டுமே போட்டியிட முடியும்" என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வரவும் அரசு திட்டமிட்டுள்ளது.
தென்னிந்திய மாநிலங்களில் மிக வேகமாக முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தடுக்க ஆந்திரா அரசு எடுத்த இந்த நடவடிக்கை, நாடு முழுவதும் விவாதப் பொருளாகி உள்ளது.
"மக்கள் தொகை மேலாண்மை என்பது வெறும் எண்ணிக்கை அல்ல, அது ஒரு மாநிலத்தின் எதிர்கால உற்பத்தித் திறன்" என முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்தத் திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
===================