தமிழ் புத்தாண்டு வாழ்த்து
சித்திரை திருநாளாம் தமிழ் புத்தாண்டு தமிழகத்தில், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களாலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், தமிழ் புத்தாண்டை கொண்டாடும் தமிழர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்
இது தொடரபாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “புனிதமான புத்தாண்டு தினத்தையொட்டி இனிய நல்வாழ்த்துகள்.
இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வெற்றியும், நல்ல ஆரோக்கியமும் நிறைந்திருக்க நான் பிரார்த்திக்கிறேன்.
நம்பிக்கையின் தொடக்கம்
சிறப்புமிக்க இந்த நாள் புதுப்பித்தல், நம்பிக்கை மற்றும் புதிய தொடக்கங்களின் கொண்டாட்டமாகும். இது தமிழ்ப் பண்பாட்டின் பெருமையைப் போற்றும் ஒரு தருணமாகும்.
அதன் இலக்கியம், இசை, கலை, தத்துவம், பக்தி ஆகியவற்றின் வளமான பாரம்பரியம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது.
சமூக ஒற்றுமை வளரட்டும்
சிறப்புமிக்க இந்த நாள் நமது சமூகத்தில் ஒற்றுமை உணர்வை மேலும் வளர்க்கட்டும். மகத்தான தமிழ் பண்பாட்டால் உத்வேகம் பெற்று, நாம் வெற்றியின் புதிய சிகரங்களை அடைவதோடு, இயற்கையுடனான நமது பிணைப்பையும் ஆழப்படுத்திக் கொள்வோம்”. என்று புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, டெல்லியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இல்லத்தில், நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி கொண்டாடினார்.
தெய்வப் படங்களுக்கு தீபாராதனை
பூஜை அறையில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த தெய்வங்களின் படங்களுக்கு ஆரத்தி காட்டி அவர் வழிபட்டார். துணை ஜனாதிபதியின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
====================