Prime Minister Narendra Modi appealed to public to strengthen harmony in the country 
இந்தியா

நாட்டில் நல்லிணக்கம் அவசியம் : மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

நாட்டில் நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்று. பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Kannan

இந்தியாவிடம் இருந்து பிரிந்த பாகிஸ்தான் :

சுதந்திர போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் 1947ம் ஆண்டு ஆகஸ்டு 14ம் தேதி பிரிக்கப்பட்டு தனி நாடாக உருவானது. அப்போது நிகழ்ந்த வன்முறைகள், வெறுப்பு நடவடிக்கைகள், துன்புறுத்தல்கள் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை பறிகொடுத்தனர்.

பிரிவினை கொடுமை நினைவு தினம் :

நம் மக்களின் போராட்டங்கள், தியாகங்களின் நினைவாகவும், தேச ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக மத்திய அரசு சார்பில் ஆகஸ்டு14ம் தேதி பிரிவினை கொடுமையின் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி பகிர்வு :

இதனை நினைவு கூர்ந்து, தனது சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “ நமது வரலாற்றின் அந்த துயரமான அத்தியாயத்தில் எண்ணற்ற மக்கள் அனுபவித்த எழுச்சி மற்றும் வலியை நினைவுகூரும் வகையில், இந்தியாபிரிவினை கொடுமையின் நினைவு தினத்தை அனுசரிக்கிறது.

மன உறுதியை மதிக்கும் நாள் :

மக்களின் மன உறுதியை மதிக்கும் ஒரு நாளாகவும் இது அமைகிறது. கற்பனை செய்ய முடியாத இழப்பை அவர்கள் எதிர் கொண்டனர். பாதிக்கப்பட்டவர்களில் பலர் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் குறிப்பிடத்தக்க மைல் கற்களை அடையவும் வேறு இடத்திற்கு சென்றனர். இத்தகைய கொடுமைகள் இனி எங்கும் நிகழக் கூடாது.

நல்லிணக்கம் மிகவும் அவசியம் :

எனவே, இந்த நாள் நமது நாட்டை ஒன்றாக வைத்திருக்கும் நல்லிணக்கத்தினை வலுப்படுத்துவதற்கான நமது பொறுப்பை நினைவூட்டுகிறது” இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

=======