அமெரிக்க ஒப்பந்தம் - மோடி வரவேற்பு
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராஜ்யசபாவில் நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் இந்திய இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
உலகமே இந்தியாவின் பக்கம் தான்
உலகம் புதிய ஒழுங்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. 2ம் உலகப் போருக்குப் பிறகு மீண்டும் இந்த புதிய உலகில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இம்முறை இது இந்தியாவை நோக்கியே சாய்ந்துள்ளது. உலகம் அதன் தென் பகுதியை பற்றி பேசுகிறது. இந்தியா, தென்பகுதியின் உரத்த குரலாக உள்ளது.
இதனால் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய பல நாடுகளும் முன்வருகின்றன. நாங்கள் எதிர்காலத்திற்கு தயாரான வர்த்தக ஒப்பந்தங்களை செய்து வருகிறோம்.
பெரிய வர்த்தக ஒப்பந்தங்கள்
கடந்த சில நாட்களில் 9 பெரிய வர்த்தக ஒப்பந்தங்களை செய்துள்ளோம். இந்த ஒப்பந்தங்களின் தாயாக ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தம் அமைந்துள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை முழு உலகமும் பாராட்டுகிறது.
இளைஞர்களுக்கு பயனளிக்கும்
இந்த ஒப்பந்தம் இந்திய இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்தியா இப்போது சீர்திருத்த விரைவுப் பாதையில் பயணித்து வருகிறது. 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடு என்ற இலக்கை இந்தியா அடைவது உறுதி.
3வது பெரிய பொருளாதார நாடு
கடந்த 11 ஆண்டுகளில் அதிக வளர்ச்சி மற்றும் குறைந்த பணவீக்கம் ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தின் வலிமையை பிரதிபலிக்கின்றன. இதன் மூலம், இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்க உள்ளது. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தது வருத்தமளிக்கிறது.
அவர்கள் சோர்வடைந்து வெளியேறி விட்டார்கள். ஆனால் எந்த நாடும் வர்த்தக ஒப்பந்தம் செய்ய முன்வராத ஒரு நிலைக்கு இந்தியாவை அவர்கள் கொண்டு வந்ததற்காக ஒரு நாள் அவர்கள் பதிலளிக்க வேண்டியிருக்கும்.
தொலைநோக்கு பார்வையற்ற காங்கிரஸ்
காங்கிரசுக்கு எந்த தொலைநோக்கு பார்வையும் இல்லை, நல்ல குறிக்கோளும் இல்லை. அவர்கள் செய்த தவறுகளை திருத்துவதற்கு நாங்கள் அதிக நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறோம். காங்கிரஸ் ஆட்சி செய்த ஒப்பந்தம் குறித்து யாரிடமாவது கேட்டால், ஊழல் நடந்த போபர்ஸ் ஒப்பந்தம் தான் நினைவுக்கு வரும்.
மக்களை பிரச்னையாக பார்க்கும் காங்கிரஸ்
காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கங்கள் இந்தியாவின் நற்பெயரை அழித்துவிட்டன. அதை நாங்கள் மாற்றியிருக்கிறோம். காங்கிரஸ் இந்திய மக்களை பிரச்னைகளாக கருதுகிறது. ஆனால் நாங்கள் அவர்களை எங்கள் பலமாகவும் சவால்களுக்கான தீர்வாகவும் கருதுகிறோம்.
ஜனாதிபதிக்கு இழைக்கப்பட்ட அவமானம்
மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதல் முறையாக பிரதமரின் பதிலுரை இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது இந்தியாவின் ஒரு ஏழை பழங்குடியினப் பெண் குடியரசுத் தலைவருக்கு மட்டுமல்லாமல், அவர் வகிக்கும் உயர் அரசியலமைப்புப் பதவிக்கு இழைக்கப்பட்ட அவமானம்.
எத்தனையோ பேர் கட்சி மாறியிருக்கிறார்கள். ஆனால் சீக்கியர் என்பதாலேயே இந்த அவையின் ஒரு உறுப்பினரை காங்கிரசின் கூர்மையான அறிவாளி துரோகி என பழித்துள்ளார். இது முழு சீக்கிய சமூகத்திற்கும் செய்யப்பட்ட அவமானம்.
மேற்கு வங்கத்தில் இளைஞர்களின் வேலைகளையும் உரிமைகளையும், பழங்குடியினரின் நிலங்களையும் அபகரிக்கும் ஊடுருவல்காரர்களை மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பாதுகாக்கிறது.
என்னை ஒன்றும் செய்ய முடியாது
பிரதமர் பதவி தங்கள் குடும்பத்தின் பரம்பரைச் சொத்து என்று காங்கிரஸ் கட்சியின் முதல் குடும்பம் கருதுகிறது. ‘மோடி உன் கல்லறை தோண்டப்படும்’ போன்ற முழக்கங்களை எழுப்புகிறார்கள்.
தேர்தல் தோல்விகளால் ஏற்பட்ட விரக்தியின் வெளிப்பாடு. அவர்களால் ஒருபோதும் என் கல்லறையை தோண்ட முடியாது.
என்னைப் போன்ற ஒரு ஏழை மனிதன் எப்படி இந்த பதவியை அடைந்து நீடிக்கிறான் என்பதை அவர்களால் ஜீரணிக்க முடியாததால்தான், என்னை தினமும் திட்டுகிறார்கள்.
மக்களுக்காக நான் உழைக்கிறேன்
கோடிக்கணக்கான தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் நாட்டின் ஏழை மக்களின் ஆசீர்வாதம் எனக்கு இருப்பதால், கல்லறை தோண்டும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. ஏழைகளின் நலனுக்காக எப்போதும் நான் தன்னலமின்றி உழைத்து வருகிறேன்”. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார்.
=============