இந்தியாவில் அதிபர் புதின்
PM Narendra Modi With Vladimir Putin Meet : இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு, ஜனாதிபதி மாளிகையில் இன்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட் சென்ற புதின், அங்கு மரியாதை செலுத்தினார்.
மோடி - புதின் பேச்சுவார்த்தை
இதையடுத்து, ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை புதின் சந்தித்தார். அப்போது இரு தலைவர்களும் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
புதின் தலைசிறந்தவர் - மோடி
அப்போது பேசிய பிரதமர் மோடி, “ரஷ்ய அதிபர் புதின் தொலைநோக்குடன் செயல்படக்கூடிய தலைவர். உக்ரைன் நெருக்கடி தொடங்கியதில் இருந்து நாங்கள் தொடர்ந்து விவாதித்து வருகிறோம். ஒரு உண்மையான நண்பராக அவர் எல்லாவற்றையும் அவ்வப்போது எங்களுக்குத் தெரியப்படுத்தி வருகிறார். நம்பிக்கை ஒரு பெரிய பலம் என்று நான் நம்புகிறேன்.
அமைதியை நோக்கி வழிநடத்துவோம்
இந்த விஷயத்தை (உக்ரைன் விவகாரம்) நான் உங்களுடன் பலமுறை விவாதித்துள்ளேன். அதனை உலகுக்கு முன்பாகவும் முன்வைத்துள்ளேன். அமைதியில்தான் நாடுகளின் நலன் அடங்கி இருக்கிறது. ஒன்றாக, உலகை அந்த பாதையை நோக்கி வழிநடத்துவோம். உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை, அமைதியை விரும்புகிறது என்பதை உலக நாடுகளின் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தி இருக்கிறேன்.
25 ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது
அமைதிக்கான ஒவ்வொரு முயற்சியையும் நாங்கள் ஆதரிக்கிறோம். உக்ரைனுடன் அமைதி தீர்வை எட்ட ரஷ்யா பாடுபடுகிறது. நாம் அமைதிப் பாதையில் பயணித்தால் மட்டுமே உலகம் பயனடையும். புதின் இந்திய பயணம் 25 ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது. எங்கள் இருவருக்குமான உறவும் 25 ஆண்டுகளாக உள்ளதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.” எனத் தெரிவித்தார்.
ரஷ்யா - இந்தியா ஆழமான உறவு
Current visit, agreements reached, will help further deepen Russia-India strategic partnership: Putin : இதையடுத்துப் பேசிய விளாடிமிர் புதின், “உக்ரைன் உடனான அமைதி முயற்சிகளில் இந்தியா கவனம் செலுத்துவதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரஷ்யாவும் இந்தியாவும் ராணுவம், விண்வெளி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் ஆழமான உறவுகளைக் கொண்டுள்ளன. இந்த அனைத்து துறைகளிலும் முன்னேற நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையம் - உறுதி
தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் உள்ள பெரிய அணுமின் நிலையத்தில் மீதமுள்ள 4 அணுஉலைகளை விரைவில் கட்டமைத்து தருவோம் என்று புதின் உறுதியளித்தார்.
3வது அணு உலைக்கான எரிபொருளை ரஷ்யா அனுப்பி வருகிறது. எனவே, அங்கு மின் உற்பத்தி தொடங்க உள்ளது. 4வது அணு உலைக்கான பணிகளும் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
===============