கரப்பான் பூச்சி கட்சி தொடர் போராட்டம்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, ஜூன் 28-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தை தொடங்கியது.
சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்
இந்தப் போராட்டத்துக்கு லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் ஆதரவளித்தார். அதன் வெளிப்பாடாக அவர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தையும் மேற்கொண்டார்.
21 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த அவர், டெல்லி போலீசாரால் உண்ணாவிரதப் பந்தலில் இருந்து அகற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டெல்லியில் பேரணி - போலீசார் தடியடி
இந்நிலையில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய 20ம் தேதி நாடாளுமன்றம் நோக்கிய பேரணியை சிஜேபி கட்சியினர், ஆதரவாளர்கள் மேற்கொண்டனர்.
போராட்டக்காரர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டுகள் வீசியும் கூட்டத்தைக் கலைத்தனர்.
டெல்லியில் திரளும் இளைஞர்கள்
இந்நிலையில், சிஜேபிக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. டெல்லியை நோக்கி இளைஞர்கள் திரண்டு வருவதும் படையெடுப்பதும் அதிகரித்துள்ளது.
மிகப்பெரிய இயக்கம் சிஜேபி
டெல்லி போராட்டக் களத்தில் இருந்து சிஜேபி செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரான்கா அளித்த பேட்டியில், “சுதந்திர இந்தியாவில் மிகப்பெரிய இயக்கமாக சிஜேபி உருவெடுத்துள்ளது.
கோரிக்கைகளை ஏற்கா விட்டால்...
ஜூலை 20-ம் நடந்தது வெறும் ட்ரெய்லர் தான். அரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்காவிட்டால், லட்சக்கணக்கான இளைஞர்கள் டெல்லியை நோக்கி வருவார்கள்.
அரசுக்கு சிஜேபி எச்சரிக்கை
ஏனெனில் இந்த முறை நாங்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை. அரசு உண்மையிலேயே சரியாக செயல்பட வேண்டும். இல்லையென்றால், இந்த நாட்டின் இளைஞர்கள் அவர்களை மிக மோசமாக எதிர்த்து தூக்கி எறிந்து விடுவார்கள் என்று எச்சரித்தார்.
போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யக்கூடாது என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. ஆனால் அதற்காக நாங்கள் அஞ்சி விட மாட்டோம்.
அடக்குமுறைகளை எதிர்கொள்வோம்
சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (UAPA) அல்லது தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) என எதன் கீழும் நாங்கள் கைதை எதிர்கொள்ளத் தயார். சிறை என்பது எங்கள் போராட்டத்துக்கு மிகச்சிறிய விலை.
அரசியல் கட்சிகளுக்கு நன்றி
எங்கள் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகளின் ஆதரவை நாங்கள் வரவேற்கிறோம். பாஜகவினர் ஆதரவு கொடுத்தாலும் ஏற்போம். ஏனெனில் இது மிகப்பெரிய இயக்கம். இதன் கோரிக்கைகள் உண்மையானவை” என்றார்.
எம்பிக்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம்
இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா கூட்டணி எம்பிக்கள் கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
திமுக எம்பிக்கள் பங்கேற்கவில்லை
ஆனால், திமுக எம்பிக்கள் மட்டும் சாதாரண உடையில் நாடாளுமன்றத்திற்கு வந்து இருந்தனர்.
போராட்டத்தில் பங்கேற்காமல் இருப்பதற்கான காரணம் குறித்து கருத்து தெரிவித்த திமுக எம்பி. ராசா, போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தார்.
டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்
மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்து இருப்பதால், டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 16 மெட்ரோ நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
டெல்லி காவல் நிலையங்கள் போராட்டம் தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபடுதல், காவல்துறை மீது கல்வீச்சு, பொதுச் சொத்துகளை சேதப்படுத்தல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா என்றும் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.
பாதுகாப்பு நடவடிக்கையாக கூடுதலாக 20 கம்பெனி சிஆர்பிஎஃப் வீரர்கள் மேற்கு வங்கத்தில் இருந்து டெல்லி வரவழைக்கப்பட்டுள்ளனர்.
=================