கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம்
நீட் தேர்வு முறைகேட்டைக் கண்டித்தும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும், டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம், நாடாளுமன்றம் நோக்கி பேரணி என பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போராட்ட களத்தில் ராகுல்
இளைஞர்கள், பெண்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி கலந்து கொண்டார்கள்.
முன்னதாக காயமடைந்து சிகிச்சை பெறும் மாணவர்களை ராகுல் காந்தி, மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். இதே போன்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவும் காயமடைந்த மாணவர்களை சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
பிரதமர் இல்லம் நோக்கி பேரணி
பிரதமர் மோடியின் இல்லம் நோக்கி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள், போராட்டக்காரர்களுடன் பேரணியாக சென்றனர்.
ராஜாஜி மார்க் பகுதியில் இருந்து கல்யாண் மார்க் வரை பேரணியாக சென்ற அவர்கள், பிரதமர் மோடியின் இல்லம் முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் முழக்கம்
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி முழக்கங்களை எழுப்பினர். போராட்டம் தொடங்கிய 20 நிமிடங்களில், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், களத்துக்கு வந்து ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். அப்போது, போராட்டத்தைக் கைவிடுமாறு ராகுல் காந்தியை அவர் கேட்டுக்கொண்டார்.
விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு
பின்னர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஜிதேந்திர சிங், நீட் தேர்வு முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி கோரிக்கை விடுத்ததாகவும், இதுகுறித்து அரசின் உயர்மட்டத்திடம் பேசி, விவாதத்துக்கு தயார் என உறுதியளித்ததாகவும் குறிப்பிட்டார்.
திடீரென தனது கோரிக்கையை ராகுல் காந்தி மாற்றி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று புதிய நிபந்தனையை விதித்து வார்த்தை தவறிவிட்டதாக ஜிதேந்திர சிங் குற்றஞ்சாட்டினார்.
தரையில் படுத்து ராகுல் போராட்டம்
போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில், கலைந்து செல்ல மறுத்து தரையில் படுத்துக் கொண்டு எதிர்ப்புக் காட்டிய ராகுல் காந்தியை காவலர்கள் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று பேருந்தில் ஏற்றினர்.
ராகுல் காந்தி மூக்கில் ரத்தம்
இந்த தள்ளுமுள்ளுவின் போது ராகுல் காந்தியின் மூக்கில் லேசான காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. இதே போன்று, பிரியங்கா காந்தி, கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார், கேரள முதல்வர் வி.டி.சதீஷன்...
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சுப்ரியா சுலே உள்ளிட்ட தலைவர்கள் தனித்தனி வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இரவு 9 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ராகுல் காந்தி கைதைக் கண்டித்து, கர்நாடகா, ஜார்க்கண்ட், சண்டிகர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர் மாளிகை முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இதேபோன்று தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
===================