புதிய ஆளுநர்
Rajendra Arlekar took charge as Governor of Tamil Nadu : மேற்குவங்க ஆளுநராக இருந்த சி.வி.ஆனந்த போஸ் பதவி விலகிய நிலையில், தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை மேற்குவங்க ஆளுநராக மாற்றம் செய்து ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து, தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்து விலகிய ரவி, கொல்கத்தா புறப்பட்டுச் சென்றார்.
தமிழக ஆளுநர் அர்லேகர்
தமிழகத்தின் ஆளுநர் பொறுப்பை, கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கூடுதலாக கவனிப்பார் என்று ஜனாதிபதி அறிவித்தார். இந்நிலையில், ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், சென்னை வந்தார்.
ஆளுநராக பொறுப்பேற்றார் அர்லேகர்
கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது. புதிய ஆளுநர் அர்லேகருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கே என் நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு, ரகுபதி, மா சுப்பிரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோரும் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் தலைமைச் செயலாளர், காவல் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேற்குவங்க ஆளுநர் ஆர்.என். ரவி
இதேபோன்று, மேற்குவங்க ஆளுநராக ஆர். என். ரவி பொறுப்பேற்றுக் கொண்டார். கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்குவங்க ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றுக் கொண்டார். அம்மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஆர்.என். ரவிக்கு மம்தா வாழ்த்து
நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு, ஆளுநர் ரவிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
======================