Sabarimala Ayyappa Temple Gold Theft Case : கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் உள்ள சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. 2019ஆம் ஆண்டு இந்த கோவில் நடந்த புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
அதற்காக சபரிமலை சன்னிதானம் அருகே இருந்த துவாரபாலகர் சிலையில் இருந்த தங்கக் கவசம் பராமரிப்பு பணிக்காக எடுக்கப்பட்டது.
தங்கத்தகடுகள் மாயம்
பின்னர் தேவஸ்தானம் அந்த கவசங்களை கணக்கிட்டு ஒப்படைத்த போது 42.8 கிலோவாக இருந்த தங்க கவசம் , சென்னையை சேர்ந்த நிறுவனத்தால் செப்பனிட்டு மீண்டும் ஒப்படைக்கப்பட்ட போது 38.26 கிலோவாக குறைந்து இருந்தது.
கிட்டத்தட்ட4.54 கிலோ தங்கம் மாயமாகிப்போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் கருவறை கதவுகளில் இருந்த தங்கமும் காணாமல் போனது.
நடிகர் ஜெயராம் வீட்டில் பூஜை
சபரிமலை ஐயப்பன் கோவில் கருவறை கதவுகள், துவார பாலகர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசுவதற்கான பணிகளை சென்னையை சேர்ந்த நிறுவனம் மேற்கொண்ட போது சென்னை அஷோக் நகரில் உள்ள நடிகர் ஜெயராமின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு பூஜை செய்யப்பட்டது தெரியவந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக நடிகர் ஜெயராமிடம் கேரள சிறப்பு விசாரணைக் குழுவினர் விசாரணையும் மேற்கொண்டனர்.
மறு ஆய்வு செய்ய உத்தரவு
மேலும் தங்கத்தகடு திருட்டு வழக்கில் தந்திரி கண்டரரு ராஜீவரு, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் மற்றும் ஆணையர் வாசு, தேவசம்போர்டு முன்னாள் தலைவர்பத்மகுமார் உட்பட அடுத்தடுத்து 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
இன்றைய விசாரணையில்
சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில், இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தங்கத் தகடுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் இந்த மறு ஆய்வு பாபா அணு ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்த தேசிய பரிசோதனை மையத்திற்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளனர். மேலும் வழக்கு விசாரணையை பிப், 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.