காந்தியவாதி சோனம் வாங்சுக்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உயர்கல்வித் துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தி கடந்த 26 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வந்தார் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்.
ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம்
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது இவரின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சியினர் நடத்தி வந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்தார்.
மருத்துவமனையில் வாங்சுக்
21வது நாளில் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால், வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கும் சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.
உண்ணாவிரதம் வாபஸ்
அவர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன. மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோரின் முன்னிலையில் சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.
பிரதமர் மோடி வாக்குறுதி
முன்னதாக, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் மசோதா கொண்டு வரப்பட்டு, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என, பிரதமர் மோடி வீடியோ வெளியிட்டு வாக்குறுதி அளித்து இருந்தார்.
மத்திய அரசின் கோரிக்கை ஏற்பு
இது குறித்துத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சோனம் வாங்சுக், "பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 65 எம்பிக்கள் என்னை நேரில் சந்தித்தும் அல்லது கடிதம் மூலமாகவும் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.
26 நாட்களுக்கு பிறகு வாபஸ்
பல்வேறு நிபந்தனைகள் குறித்த நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகும், நாட்டில் வன்முறை பரவுவதைத் தடுக்கும் நோக்கிலும் 26 நாட்களுக்குப் பிறகு எனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்கிறேன். இந்த நிபந்தனைகள் குறித்து விரைவில் ஒரு வீடியோவில் விரிவாக விளக்குகிறேன்.
வன்முறை நிகழ்ந்து விடக்கூடாது
அதேவேளையில் எந்த இடத்திலும் வன்முறைக்கு இடம் தராதவாறு அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று வாங்குச் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வரவேற்பு
சோனம் வாங்சுக் தனது போராட்டத்தை வாபஸ் பெற்றதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவர் மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றி விரைந்து உடல்நலம் பெற வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.
போராட்டத்தை தொடரும் சிஜேபி
சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டாலும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை டெல்லி ஜந்தர் மந்தரில் தங்களது அமைதியான போராட்டம் தொடரும்.
ஜூலை 24 அன்று நாடு முழுவதும் மாவட்ட அளவில் அமைதிப் பேரணிகள் நடைபெறும் என்றும் சிஜேபி அமைப்பு அறிவித்துள்ளது.
==================