தெருநாய்கள் தொடர்பான வழக்கு
Stray Dogs Case : Supreme Court Summons Chief Secretaries Of States டெல்லியில் அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னர் பிறப்பித்தது. இதற்கு பிராணிகள் விரும்பிகள் (Animal Lovers) மற்றும் ஆர்வலர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இந்த விவகாரத்தை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என அறிவித்தார்.
விசாரணையை மேற்கொண்ட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, தெரு நாய்களைக் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற முந்தைய உத்தரவுக்குத் தடை விதித்து, அவற்றைச் சுற்றுப்புறப் பகுதிகளிலேயே விட்டுவிடலாம் எனப் பரிந்துரைத்தது.
நீதிமன்ற உத்தரவு - மாநிலங்கள் அலட்சியம்
தெருநாய் விவகாரம் தொடர்பாக, அனைத்து மாநிலங்களும் இரண்டு மாதங்களுக்குள் பிரமாணப் பத்திரம் (Affidavit) தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு இணங்கி, மேற்கு வங்கம், தெலங்கானா மற்றும் டெல்லி மாநகராட்சி ஆகிய மூன்று மட்டுமே பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்தன. தமிழகம் உட்பட 25 மாநிலங்கள் தாக்கல் செய்யவில்லை.
உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்ட பின்னரும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத காரணத்தால், தமிழ்நாடு உள்ளிட்ட 25 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
தலைமை செயலர்கள் ஆஜராக உத்தரவு
25 மாநிலங்களின் தலைமை செயலாளர்களும் வரும் 3ம் தேதி ( நவம்பர் 3 ) ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவ்வாறு ஆஜராகா விட்டால் நீதிமன்றத்தை நாங்கள் ஆடிட்டோரியத்தில் நடத்துவோம் என நீதிபதிகள் கண்டிப்புடன் கூறினர்.
===============