Supreme Court advised Central Government not to introducea third language in Class 9 under the CBSE  AI generated
இந்தியா

3வது மொழி ”6ம் வகுப்பில் அமல்படுத்தலாம்” : 9-ல் கொண்டு வருவது மாணவர்களுக்கு மன அழுத்தம் : உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 9ம் வகுப்பில் மூன்றாவது மொழியை அறிமுகப்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது உச்ச நீதிமன்றம்.

Kannan

நவோதயா பள்ளிகள் - உச்ச நீதிமன்றம் விசாரணை

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 9ம் வகுப்பு முதல் மூன்றாவது மொழியை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

3வது மொழி - நீதிபதி கேள்வி

தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஜவஹர் வித்யாலயாக்களை தமிழக அரசு எதிர்க்கக் காரணம் அதில் மும்மொழி திட்டம் இருப்பதுதான்” என்று வாதிட்டார்.

அதற்கு பதில் அளித்த நீதிபதி நாகரத்னா, ”மாநில மொழி கற்பிக்கப்பட வேண்டும், ஆங்கிலம் கற்பிக்கப்பட வேண்டும், மற்றும் ஏதேனும் ஒரு மொழி கற்பிக்கப்பட வேண்டும். இதில், இந்தி என குறிப்பிடப்படவில்லை.” என்று தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த தன்னார்வ தொண்டு நிறுவன வழக்கறிஞர் பிரியதர்ஷினி, “எந்த ஒரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படக்கூடாது என்று தேசியக் கல்விக் கொள்கை தெளிவாகக் கூறுகிறது.” என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதி நாகரத்னா, “உங்களுக்கு இந்தி வேண்டாம், ஆனால் அது சமஸ்கிருதமாக இருந்தால் என்ன பிரச்சினை?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த தமிழக அரசு வழக்கறிஞர், “மூன்றாவது மொழி 9-ம் வகுப்பில் இருந்து மட்டுமே கட்டாயமாக்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டார்

மாணவர்களுக்கு மன அழுத்தம்

“இது மிகவும் தவறானது. ஒன்பதாம் வகுப்பு என்பது மன அழுத்தம் நிறைந்த ஒரு காலகட்டம். ஏன் 9ம் வகுப்பில் இருந்து ஒரு புதிய மொழியை அறிமுகப்படுத்துகிறீர்கள்?

6ம் வகுப்பில் 3வது மொழி

அதை 6ம் வகுப்பிலேயே அறிமுகப்படுத்தலாமே?” என வினவினார். இது மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்கும் என்றார் அவர்.

மத்திய அரசுக்கு கோரிக்கை

“இந்திய அரசே, தயவு செய்து 9-ம் வகுப்பில் மூன்றாவது மொழியை அறிமுகப்படுத்தாதீர்கள். சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மாநில பாடத்திட்டங்கள் என எதுவாக இருந்தாலும் 10-ம் வகுப்பு என்பது ஒரு பொதுத் தேர்வு. இதற்கான மன அழுத்தம் 8-ம் வகுப்பின் முடிவிலிருந்தே தொடங்கி விடுகிறது” என தெரிவித்தார்.

மாநில அரசுகளுக்கு கோரிக்கை

“உங்களுக்கு என தனிப்பட்ட கல்வி முறை இருக்கலாம். ஆனால், மத்திய அரசு பள்ளிகளைத் தடுக்காதீர்கள். இது மத்திய அரசின் திட்டம், எனவே நாம் ஏன் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மை வேண்டாம்” என்று மாநில அரசுகளை நீதிபதி நாகரத்னா கேட்டுக் கொண்டார்.

=================