ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு
Supreme Court Judgment on President Governor Timeline : ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக கூறி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிமன்றம், 'மசோதாக்கள் மீது ஒரு மாதத்தில் இருந்து மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்' என, ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு கால வரம்பு நிர்ணயித்து தீர்ப்பு வழங்கியது. .
ஜனாதிபதி கேட்ட 14 கேள்விகள்
இந்த தீர்ப்பு குறித்து, 14 கேள்விகளை எழுப்பிய ஜனாதிபதி திரௌபதி முர்மு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தையே வழக்காக மாற்றிய தலைமை நீதிபதி கவாய், இதன் மீது ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்த உத்தர விட்டார்.
5 நீதிபதிகள் அமர்வு விசாரணை
அதன்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துர்கர் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. செப்டம்பர் 11ம் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பினை வழங்கியது அரசியல் சாசன அமர்வு.
நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கள் :
சட்டசபைகளால் நிறைவேற்றப்படும் மசோதாவை ஆளுநர் கால வரம்பின்றி நிறுத்தி வைக்க முடியாது.
நீண்ட காலம் மசோதாவை நிறுத்தி வைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிப்பது, அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள நெகிழ்வுத்தன்மைக்கு எதிரானது.
அரசியல் சாசனத்தின் 200வது பிரிவின்படி மசோதா மீது முடிவெடுக்க ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள் தான் உள்ளன.
அதாவது ஒப்புதல் அளிக்கலாம். அல்லது நிராகரிக்கலாம் அல்லது திருப்பி அனுப்பலாம். நான்காவது வாய்ப்பு என்பது கிடையாது.
மசோதாவை நிறுத்தி வைத்தால் அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.
மசோதாக்களை ஏற்பதில் மாநில அரசின் ஆலோசனையை ஆளுநர் ஏற்க வேண்டியதில்லை.
மசோதாவை ஆளுநர் காலவரம்பின்றி நிறுத்தி வைக்க முடியாது.
குடியரசுத்தலைவருக்கு மசோதாவை அனுப்ப மட்டுமே ஆளுநர் நிறுத்தி வைக்க முடியும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், அந்த அமைச்சரவையயும் மட்டுமே முடிவுகள் எடுப்பதில் முக்கியத்துவம் பெறமுடியும்.
ஆளுநரின் செயல்பாடுகளை அரசியலமைப்பு நீதிமன்றங்கள் கேள்வி கேட்க முடியாது.
ஆளுநருக்கு நீதிமன்றங்கள் உத்தரவிட முடியாது. வேண்டுமானால் அறிவுறுத்தல் வழங்கலாம்.
ஆளுநர், ஜனாதிபதிக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதிக்க முடியாது. அவ்வாறு காலக்கெடு விதிப்பது, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.
இவ்வாறு ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பினை வழங்கி உள்ளது.
=================