மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல்
மேற்கு வங்க மாநிலத்தில் 2 கட்டங்களாக வரும் 23 மற்றும் 29ம் தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்புக்கு பிறகு, தலைமைச் செயலாளர் உள்ளிட்டோரை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்தது.
இதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்ததை எதிர்த்து அர்க்கா குமார் நாக் என்பவர் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பு வாதம்
மனுதாரர் தரப்பில் ஆதரவான மூத்த வழக்கறிஞர் கல்யான் பானர்ஜி ”தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக இத்தகைய முடிவுகளை எடுத்துள்ளது.
தலைமைச் செயலாளர் உள்ளிட்ட 1100 அதிகாரிகளை ஒரே இரவில் இடமாற்றம் செய்தது. ஒட்டுமொத்தமாக மாற்றினால் மாநில நிர்வாகப் பணிகள் முடங்கும்’’ என்று தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம்
இதனை பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,‘‘அதிகாரிகள் இடமாற்றம் என்பது தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் வழக்கமான நடைமுறை ஆகும்.
இது ஒன்றும் புதியது கிடையாது.தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் முழு அதிகாரம் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு.
நீதிமன்றம் தலையிட முடியாது
இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே இந்த விவகாரத்தில் முன்னதாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.
மாநில அரசுடன் ஆலோசிக்க வேண்டும்
தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் இடமாற்ற விவகாரத்தில் ஒரு முக்கியக் குறிப்பை நீதிபதிகள் பதிவு செய்துள்ளனர்.
‘‘அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் பொழுது மாநில அரசுடன் தேர்தல் ஆணையம் கலந்தாலோசிக்கவில்லை\” என்ற குற்றச்சாட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று.
இது சர்ச்சைக்குரிய சட்டரீதியான கேள்வி. ஏனெனில் அகில இந்திய பணிகள் அமைக்கப்பட்டதில் நோக்கமே சிதைக்கப்பட்டு வருவது நமது நாட்டின் துரதிருஷ்டம்.
நம்பிக்கையின்மையே காரணம்
மாநில அரசு, தேர்தல் ஆணையம் என இருதரப்புக்கும் நம்பிக்கையின்மை நிலவியதால் எஸ்ஐஆர் பணியில் நீதிபதிகளை நியமிக்க வேண்டிய நிலை உச்ச நீதிமன்றத்திற்கு ஏற்பட்டது எனத் தெரிவித்த தலைமை நீதிபதி, அது குறித்து மட்டும் பின்னர் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
======